ஆர்எம்கேவி-போத்தீஸில் வருமான வரி ரெய்ட்!
சென்னை: சென்னையில் உள்ள பிரபல ஜவுளிக் கடைகளான ஆர்.எம்.கேவி மற்றும் போத்தீஸ் நிறுவனங்களில் அதிரடியாக இன்று காலை 9 மணிமுதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
சென்னை, திருநெல்வேலி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போத்தீஸ் கடைகளிலும், அலுவலகம் மற்றும் உரிமையாளர்களின் வீடுகளிலும் ஒரே நேரத்தில் சோதனை நடைபெறுகிறது.
தி.நகர் உஸ்மான் ரோட்டில் உள்ள ஜவுளிக் கடைக்கு அதிகாரிகள் சென்ற போது ஜவுளி எடுக்க வந்த பொதுமக்களும் கடைக்குள் வந்ததால் இடைஞ்சல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்களை வெளியே போக சொல்லி ஷட்டரை பூட்டிக் கொண்டு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதனால் கடைகள் மூடப்பட்டுள்ளன. துணி வாங்க வந்த மக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். கடைகளுக்கு முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதே போல ஆர்எம்கேவி ஜவுளிக் கடைகளிலும் சோதனை நடந்தது. சென்னை உஸ்மான் ரோட்டில் உள்ள கடை, நெல்லை வண்ணாரப் பேட்டையில் உள்ள இதன் கிளை ஆகிய இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்பட்ட பின்னரே கடைகள் திறக்கப்படும் எனத் தெரிகிறது. இதனால் தி.நகர், திருநெல்வேலி பகுதிகள் பரபரப்பாக காணப்பட்டது.
மேலும் நெல்லை, சென்னை, திருவனந்தபுரத்தில் உள்ள ஆர்.எம்.கே.வி. உரிமையாளர்களின் வீடுகளிலும் ரெய்டந் நடந்தது.
மேலும் போத்தீஸ், ஆர்.எம்.கே.வி. நிறுவனங்களுக்கு சொந்தமாக பட்டு நெசவு கூடங்களும் உள்ளன. காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள இந்த கூடங்களிலும் சோதனை நடந்தது.
மொத்தம் 15 இடங்களில் சுமார் 500 வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனைகளை நடத்தி வருகின்றனர்.