கைதிகளுக்கு தலைவரைத் தேர்வு செய்ய தேர்தல்: டிஜிபி நட்ராஜ்
சேலம்: தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு தேர்தல் நடத்தி அவர்களில் ஒருவரை தலைவராக தேர்வு செய்ய தேர்தல் நடத்தப்படும் என்று சிறைத்துறை டிஜிபி நட்ராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், போன்ற பல்வேறு முக்கிய இடங்களில் 9 மத்திய சிறைகள் உள்ளன. இந்த சிறைச்சாலைகளில் தண்டனைக் கைதிகள் கிட்டத்தட்ட 10 ஆயிரம் பேர் உள்ளனர்.
இவர்களை நல்வழிப் படுத்தும் நோக்கில் தமிழக அரசு கைதிகளுக்கு பல்வேறு நல திட்டங்களை அறிவித்துள்ளது.
இது குறித்து சிறைத்துறை டிஜிபி நட்ராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், பஞ்சாயத்து முறையைப் போன்று தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறைச் சாலைகளில் உள்ள கைதிகளின் குறைகளை போக்கும் விதத்தில் அவர்களுக்கு தேர்தல் நடத்தப்படும்.
தேர்தலில் கைதிகளில் ஒருவர் தலைவராக தேர்வு செய்யப்படுவார். அவர் சிறைச்சாலைகளில் உள்ள நிறை, குறைகளை சிறைத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிப்பார்.
அதன் மூலம் கைதிகளின் குறைகள் கண்டறியப்பட்டு, அதை நிவர்த்தி செய்யப்படும்.
கைதிகளுக்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.