'ஹின்ட்ராப்' உதயகுமார் உடல்நிலை மோசம்-மனைவி
கடந்த 2007ம் ஆண்டு மலேசிய அரசை எதிர்த்து ஹின்ட்ராப் அமைப்பு மிகப் பெரிய போராட்டம் நடத்தியது. இதனால் உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாக கூறி மலேசிய அரசு அவ்வமைப்பின் தலைவர் உதயகுமார் உள்ளிட்ட நான்கு இந்தியர்களைக் கைது செய்தது.
அவர்கள் மீது உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது. இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோர் கண்டிப்பாக 2 ஆண்டுகள், எவ்வித விசாரணைக்கும் உட்படுத்தப்படாமல் சிறையில் வாட வேண்டும்.
தங்களை விடுவிக்கக் கோரி உதயக்குமார் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை அந்நாட்டு நீதிமன்றங்கள் நிராகரித்து விட்டன.
இந்நிலையில் காமுன்டிங் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் உதயக்குமாருக்கு சரியான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என அவரது மனைவி இந்திரா தேவி குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
எனது கணவரை சிறையில் சென்று பார்த்தேன். அவரது உடல்நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்துவிட்டேன். அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என போலீசாரிடம் கேட்டோம். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர்.
அவருக்கு சர்க்கரை நோயும், இதய கோளாறும் இருக்கின்றன. ஆனால் சிறையில் அவருக்கு வேண்டுமென்றே அதிக இனிப்பு உள்ள உணவுகள் வழங்கப்படுகின்றன. சர்க்கரை நோயாளிகளுக்கு என்ன உணவு வழங்க வேண்டும் என்பது தொடர்பாக அறிவுறுத்த அங்கு டாக்டர்கள் யாரும் இல்லை.
அவரது கால் கட்டை விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. சர்க்கரை வியாதி காரணமாக காயம் குணமடையாமல், பெரிதாகிவிட்டது. அவரது கால் அதிக வீக்கத்துடன், கருநிறத்துக்கு மாறியுள்ளது.
சர்க்கரை நோய் அதிகமானால், இந்த புண் காரணமாக அவரது காலை வெட்டி எடுக்கவேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும். எனவே அவருக்கு விரைவில் சரியான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
சில நாட்களுக்கு முன் அவர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால், டாக்டர்கள் அங்கு படுக்கை காலியாக இல்லை என கூறி அவரை திருப்பி அனுப்பிவிட்டனர் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், தனது கணவருக்கு உடனடியாக சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கோரி உதயக்குமார் சார்பில் பிரிக் பீல்ட்ஸ் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றையும் அவர் அளித்துள்ளார்.
அவருடன் தெலுக் இன்டன் எம்.பி. மனோகரன், வக்கீல் சுரேந்திரன் மற்றும் 50க்கும் மேற்பட்ட தமிழர்களும் வந்திருந்தனர்.