2 நாளில் முதலீட்டாளர் நஷ்டம் ரூ.1.70 லட்சம் கோடி!
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் சலுகைகள் ஏதுமில்லாததால், மும்பை பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு 16-ம் தேதி ஒரே நாளில் ரூ.1 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது. இந்த பாதிப்பு அடுத்த நாளும் தொடர்ந்தது.
கடந்த 2 வாரங்களாக ஓரளவு ஏற்றம் கண்டு வந்த பங்குச் சந்தை, பட்ஜெட்டால் ஒரேயடியாக பாதிக்கப்பட்டது.
இந்த மத்திய இடைக்கால பட்ஜெட்டில் எந்த வரிச் சலுகைகள் இடம்பெறவில்லை. இதனால் அனைத்துத் தரப்பினரின் அதிருப்தியையும் சம்பாதித்துவிட்டது மத்திய அரசு.
இதையடுத்து, பட்ஜெட் தாக்கலான 16ம் தேதியன்று மட்டும் மும்பை பங்குச் சந்தையில் 329 புள்ளிகள் சரிந்தன. அதன்மூலம் ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது. சென்செக்ஸ் குறியீட்டைச் சேர்ந்த 30 நிறுவனங்களுக்கு மட்டும் மொத்த பங்கு மதிப்பில் ரூ.48,400 கோடி சரிவு ஏற்பட்டது.
செவ்வாய்க்கிழமையும் இந்த நிலை தொடர்ந்தது. அன்று ஒருநாளில் மட்டும் ரூ.70 ஆயிரம் கோடி வரை இந்திய முதலீட்டாளர்கள் இழந்துவிட்டனர்.
இதனால் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த பங்கு மதிப்பு ரூ.30.71 லட்சம் கோடியில் இருந்து ரூ.27.99 லட்சம் கோடியாகக் குறைந்து விட்டது.