ராஜபக்சே அளித்த ஆலோசர் பதவி - நிராகரித்தார் நாராயணமூர்த்தி
இலங்கைத் தலைநகர் கொழும்பில் சில நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியில் நாராயணமூர்த்தி கலந்து கொண்டார். அதிபர் மாளிகையில் நடந்த இந்த நிகழ்ச்சியின்போது இலங்கை அதிபருக்கான தகவல் தொழில்நுட்ப ஆலோசகராக நாராயணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ராஜபக்சே அறிவித்தார்.
இந்த அறிவிப்பு இந்தியாவில் குறிப்பாக தமிழகத்திலும், உலகத் தமிழர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது.
இலங்கையில் பச்சைப் படுகொலையில் ஈடுபட்டு வரும் ராஜபக்சேவின் ஆலோசகராக நாராயணமூர்த்தி பதவியேற்கக் கூடாது என்று கோரிக்கை எழுந்தது.
குறிப்பாக கர்நாடக வன்னியர் சங்கம் இந்தக் கோரிக்கையை சற்று பலமாக விடுத்தது.
மேலும், பெங்களூரில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொண்ட பிரமாண்ட பேரணியின்போதும், நாராயணமூர்த்தி இந்த கோரிக்கையை ஏற்கக் கூடாது என்று கோரப்பட்டது.
மேலும், சென்னையில் உள்ள இன்போசிஸ் அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தப் போவதாக பல்வேறு தமிழக கட்சிகளும் அறிவிப்பு வெளியிட்டன. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் ஆலோசகர் பதவியை ஏற்கப் போவதில்லை என்று நாராயணமூர்த்தி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனது சொந்தக் காரணங்களுக்காக இப்பதவியை நான் ஏற்க முடியாது. இதை முறைப்படி இலங்கை அரசுக்குத் தெரிவிப்பேன் என்றார்.
உலகெங்கும் உள்ள தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்த முடிவை நாராயணமூர்த்தி எடுத்திருக்கலாம் என்று தெரிகிறது.