சீமான் இன்று அல்லது நாளை கைதாவார்-ஆற்காடு
சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன் இன்று ஒரு ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வந்து பேசினார். அவர் கூறியதாவது:
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. அதில் பல கட்சிகள் உள்ளன. இந்த கட்சியினர் தத்தம் எல்லைக்குள் இருந்து செயல்பட வேண்டும். மற்ற கட்சிகளுக்கு இடையூறு செய்யக்கூடாது.
ஆனால் இங்கு தினமும் நடக்கும் செயல்கள் அவ்வாறு இல்லை. காங்கிரஸ் கட்சி மீது விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள், இலங்கை தமிழர்களை பாதுகாப்பதாக கூறிக்கொண்டு, குறி வைத்து தாக்கி வருகிறார்கள்.
மதுரையில் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஸ்வரன் அலுவலகம், சுதர்சன நாச்சியப்பன் எம்பியின் அலுவலகம், வேலூரில் என் அலுவலகம் ஆகியவை தாக்கப்பட்டுள்ளன. சத்தியமூர்த்தி பவன் முன் இருந்த பேனர்கள் எரிக்கப்பட்டுள்ளன. சத்திய மூர்த்தி பவன் உள்ளே புகுந்து தாக்கியுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் இந்திரா காந்தி, சோனியா காந்தி ஆகியோரின் படங்கள், சிலைகள் அவமதிக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் கொடிகள் எரிக்கப்படுகின்றன.
பொதுக் கூட்டம் என்ற பெயரில் நெல்லையில் வழக்கறிஞர்கள் என்ற போர்வையில், சினிமா டைரக்டர் சீமானை வரவேற்று பொதுக் கூட்டம் நடத்தியுள்ளனர். கோர்ட்டுக்குள்ளும் புகுந்து தாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
டைரக்டர் சீ/மான் எல்லா பொதுக் கூட்டங்களிலும் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசுகிறார். சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசிய அவர், "சினிமாவில் பெண்களை கற்பழிக்கும் வில்லனை எதிர்க்கும் கதாநாயகனுக்கு பாராட்டி பரிசு கொடுக்கிறார்கள். ஆனால் பிரபாகரனை மட்டும் குறை சொல்வது ஏன்?'' என்று கூறியுள்ளார்.
இப்படிப்பட்ட பேச்சுகளை போலீசார் கேட்டுக் கொண்டிருப்பது ஏன்?.
புதுச்சேரியிலும் இப்படி பேசிய டைரக்டர் சீமானை அங்குள்ள போலீசார் கைது செய்ய முயன்று வருகிறார்கள். ஆனால் அவர் தமிழ்நாட்டுக்குள்ளும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயாதது ஏன்?.
தொல்.திருமாவளவனும், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசி வருகிறார். இவர் மீதும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?.
இவர்கள் மீது தேசியபாது காப்பு சட்டம் பாய வேண்டும். யாருக்கோ பயந்து இந்த அரசு நடவடிக்கை எடுக்காமல் உள்ளதா?.
தமிழ்நாட்டில் அமைதி ஏற்படவும், காங்கிரசாரை பாதுகாக்கவும், விடுதலைப் புலிகள் ஆதரிக்கப்படுவதற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார் ஞானசேகரன்.
இதற்கு பதிலளித்து அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேசுகையில்,
காவல்துறை யாருக்கும் பயப்படாது. யாராக இருந்தாலும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும். முதல்வரிடமும் இது பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது பற்றி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டைரக்டர் சீமான் புதுச்சேரியில் கடந்த 12ம் தேதியன்று பேசியது தொடர்பாக அவரைக் கைது செய்ய 5 தனி போலீஸ் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அவரை போலீசார் தேடி வருகிறார்கள். கடலூர், ராயப்பேட்டை, அந்தியூர், வேலூர், மதுரை அண்ணா நகரில் காங்கிரஸ் அலுவலகம் தாக்கப்பட்டது குறித்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிலர் கைதாகியுள்ளனர்.
தாக்குதல் நடத்தியவர்கள் மீது குண்டர் சட்டத்தின்படியோ அல்லது தேசிய பாதுகாப்புச் சட்டப்படியோ காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார்.
அப்போது அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன் குறுக்கிட்டு, டைரக்டர் சீமான் புதுச்சேரியில் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பேசியுள்ளார். நெல்லை பொதுக் கூட்டத்திலும் பேசியுள்ளார். அப்போது இந்த 5 போலீஸ் படைகள் சீமானை கைது செய்யாமல் எங்கு போயின?.
எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதாவையும், டைரக்டர் சீமான் மோசமாக பேசியுள்ளார். இதில் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள்? என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் வீராசாமி, டைரக்டர் சீமான் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். இன்றோ அல்லது நாளையோ அவர் கைது செய்யப்படுவார் என்றார்.