கோவையில் இன்று பொதுக்கூட்டம் வைகோ, ராமதாஸ் பங்கேற்பு
கோவை: இலங்கைத் தமிழர்களை இனப்படுகொலையிலிருந்து காக்கக் கோரி கோவையில் இன்று பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் வைகோ, ராமதாஸ், பழ.நெடுமாறன், தா.பாண்டியன், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இதுகுறித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில், கோவை மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் மோகன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கையில் வாழும் அப்பாவி தமிழர்களை ராஜபக்சே அரசின் சிங்கள ராணுவம் கொன்று குவித்து வருகிறது. காயம் அடைந்த தமிழர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவர்களோ, மருத்துவமனைகளோ இல்லாமல் ஈழத்தமிழர்கள் செத்து மடிந்து வருகிறார்கள்.
சிங்களர்களின் துப்பாக்கிகளுக்கு பலியான தமிழர்களின் சடலங்கள் சாலையோரங்களிலும், மண் மேடுகளிலும், மலை முகடுகளிலும் சிதறி கிடக்கிறது என்ற தகவல் நம் நெஞ்சங்களை பதற வைக்கிறது. இலங்கை தமிழர்களை காப்பாற்றக்கோரி முத்துக்குமார் உள்பட பலர் தீக்குளித்து இறந்துள்ளனர்.
இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் ஒத்த கருத்துடைய அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள், வணிகர் சங்கங்கள், தொழில் அமைப்புகள் ஒன்று கூடி இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி கடந்த 4-ந்தேதி பொது வேலை நிறுத்தத்தை தமிழ்நாட்டில் வெற்றிகரமாக நடத்த காட்டியது.
கடந்த 7-ந்தேதி தமிழ்நாட்டின் முக்கிய நகரங்கள், கிராமங்களில் மாபெரும் கறுப்புக்கொடி ஊர்வலமும், கடந்த 17-ந்தேதி மனித சங்கிலி போராட்டமும் நடைபெற்றது.
19-ந்தேதி வியாழக்கிழமை மாலை 5 மணியளவில், கோவை ராஜவீதி தேர்நிலைத்திடலில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் பா.ம.க. நிறுவன தலைவர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன், பாரதீய ஜனதா துணைத்தலைவர் எச்.ராஜா, ம.தி.மு.க. அவைத் தலைவர் மு.கண்ணப்பன், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன், தேசியவாத காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, தேசியலீக் மாநில தலைவர் பசீர் அகமது, மற்றும் புதிய பார்வை ஆசிரியர் எம்.நடராஜன் உள்பட தலைவர்கள் சிறப்புரையாற்றுகிறார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சோனியா காந்தியும், பிரணாப் முகர்ஜியும் கைவிரித்து விட்டதாக டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளதால், இந்தக் கூட்டத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பான போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்த அறிவிப்பை தலைவர்கள் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.