For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போலீஸ் - வக்கீல் கலவரம்: சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று நடந்த வரலாறு காணாத பெரும் வன்முறைச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசின் பரிந்துரையின்பேரில், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாட்டையே நேற்று மாலை நடந்த உயர்நீதிமன்றக் கலவரம் அதிர வைத்து விட்டது. இந்தியாவில் உள்ள எந்த உயர்நீதிமன்றத்திலும் இதுவரை நடந்திராத அளவுக்கு போலீஸாரும், வக்கீல்களும், இந்தியா, பாகிஸ்தான் சண்டை போல நேற்று மோதிக் கொண்டது அனைவரையும் அதிர வைத்துள்ளது.

வரலாறு காணாத இந்த மோதலில், நீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்தனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான வக்கீல்கள், கோர்ட் ஊழியர்கள் உள்ளிட்டோர் காயமடைந்தனர். ஏராளமான பத்திரிக்கையாளர்களும் காயமடைந்தனர். நூற்றுக்கணக்கான வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன, தீவைத்துக் கொளுத்தப்பட்டன.

உயர்நீதிமன்ற காவல் நிலையத்தையும் வக்கீல்கள் தீ வைத்துக் கொளுத்தி சாம்பலாக்கி விட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நேற்று மாலை பொது நலன் வழக்காக உயர்நீதிமன்றம் விசாரித்தது. தற்காலிக தலைமை நீதிபதி முகோபாத்யாயா தலைமையில் நீதிபதிகள் சந்துரு, தனபாலன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இது விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி, உள்துறைச் செயலாளர் மாலதி, பொது துறை செயலாளர் ஜோதி ஜெகராஜன், டி.ஜி.பி. கே.பி.ஜெயின், போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆஜரானார்கள்.

இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. மூத்த வக்கீல்கள் ஆர்.வைகை, பிரகாஷ், பெண் வக்கீல் சங்க தலைவர் கே.சாந்தகுமாரி, வக்கீல்கள் சங்க செயலாளர் வேல்முருகன் உள்பட பலர் வாதாடினார்கள்.

விசாரணையின்போது உள்துறை செயலாளர் மாலதி இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு விட அரசு தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.

அரசே முன்வந்து கூறியதை ஏற்று இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், வாகனங்கள் சேதப்படுத்தியது குறித்து ஆராய 3 கமிட்டியை நீதிபதிகள் நியமித்தனர்.

இந்தக் குழுவில் பதிவாளர் ஜெனரல் மாலா, வக்கீல்கள் சங்க செயலாளர் வேல்முருகன், பெண் வக்கீல் சங்க தலைவர் சாந்தகுமாரி, மூத்த வக்கீல் ஆர்.வைகை உள்ளிட்டோர் இதில் இடம் பெற்றுள்ளனர்.

வாகனங்கள் மற்றும் ஐகோர்ட்டு வளாகத்தில் ஏற்பட்ட சேதங்கள் அனைத்தையும் வீடியோவில் படமாக்கவும் நீதிபதி முகோபாத்யாயா உத்தரவிட்டார்.

வழக்கு விசாரணை மீண்டும் திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X