10 தமிழக மீனவர்களைப் பிடித்துச் சென்ற இலங்கை கடற்படை - சிறையில் அடைப்பு
ராமநாதபுரம்: கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 10 மீனவர்களை இலங்கைக் கடற்படை பிடித்துச் சென்றது. பின்னர் தமிழக மீனவர்கள் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு அனுராதபுரா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை சேர்ந்த ஐசக்லியோன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் ஐசக் (25), ஸ்டான்லி (32), அந்தோணிபிமல் (18), பூண்டி (30), துடிஸ் (24) ஆகியோர் மண்டபம் தெற்கு கடற்கரையில் இருந்து மீன்பிடிக்க சென்றனர்.
இதேபோல் தங்கச்சிமடம் சூசையப்பர்பட்டிணம் அந்தோணிராயப்பன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ஆரோக்கியராஜ் (39), பாக்கியம் (30), சவரிராஜ் (27), சென்சன் (19), சேகரன் (30) ஆகியோர் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் 10 பேரும் மன்னார் வளைகுடாபகுதியில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு வந்த சிங்கள கடற்படையினர் 10 மீனவர்களையும் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அனைவரையும் படகுகளுடன் இலங்கைக்கு அழைத்துச் சென்று தலைமன்னார் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் போலீஸார் 10 பேரையும் மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
அவர்களை விசாரித்த நீதிபதி கயஸ், பத்து பேரையும் அனுராதபுரம் சிறையில் மார்ச் 6ம் தேதி வரை அடைக்க உத்தரவிட்டார்.
மன்னார் வளைகுடா முற்றிலும் தமிழகத்தை ஒட்டியுள்ள இந்திய கடல் பகுதியாகும். இங்கு இதுவரை தமிழக மீனவர்களை இலங்கைப் படையினர் பிடித்தது இல்லை. ஆனால் முதல் முறையாக இங்கும் நுழைந்து அட்டகாசம் செய்துள்ளனர்.
இதனால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடும் கோபமடைந்துள்ளனர்.