நீதிபதிக்கு அடி-மாஜிஸ்திரேட் உண்ணாவிரதம்
வேலூர்: சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்களை தடியடி நடத்தி போலீஸார் கலைத்தபோது நீதிபதி ஆறுமுகப்பெருமாள் ஆதித்தன் தாக்கப்பட்டதைக் கண்டித்து வேலூரில் மாஜிஸ்திரேட் ஒருவர் உண்ணாவிரதம் இருந்தார்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில்,நீதிபதி மற்றும் வக்கீல்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து, வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் எஸ்.குணசேகரன் நேற்று காலை 9.30 மணி அளவில் உண்ணாவிரதம் தொடங்கினார்.
கோர்ட் நுழைவுவாயிலின் முன்புற வராண்டாவில் பெட்ஷீட்டை விரித்து அதில் மாஜிஸ்திரேட்டு உட்கார்ந்தார். சிறிது நேரம் கழித்து, வராண்டாவில் நாற்காலியைப் போட்டு உட்கார்ந்தார்.
அவருடன் ஆற்காடு வக்கீல்கள் சங்க தலைவர் பாபு தலைமையில் ஒரு பெண் உள்பட 15 வக்கீல்கள் சற்று தள்ளி, உண்ணாவிரதம் தொடங்கினார்கள்.
மாலை 5.30 மணி வரை மாஜிஸ்திரேட் மெளனம் அனுஷ்டித்து உண்ணாவிரதம் இருந்தார். பின்னர் வழக்கறிஞர் அண்ணாமலை மாலையில் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.