திருப்பூர் மாவட்டம் நாளை உதயம்!
திருப்பூர்: புதிய திருப்பூர் மாவட்டத்தை தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை துவக்கி வைக்கிறார்.
இதற்கான விழா நாளை மாலை 4 மணிக்கு இடுவம்பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது.
கோவை, ஈரோடு மாவட்டங்களில் இருந்து பிரிக்கப்பட்ட சுமார் 4,900 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட பகுதிகள் இந்த திருப்பூர் மாவட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த மாவ்டடத்தின் மக்கள் தொகை 19,17,033 ஆக இருக்கும். இந்த மாவட்டத்தில் திருப்பூர் மாநகராட்சி தவிர, 6 நகராட்சிகள், 17 டவுன் பஞ்சாயத்துகள், 13 பஞ்சாயத்து யூனியன்கள், 273 கிராம பஞ்சாயத்துகள் ஆகிய உள்ளாட்சி அமைப்புகள் இருக்கும்.
தாராபுரம், அவினாசி, பல்லடம், காங்கேயம், உடுமலைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் இந்த மாவட்டத்தின் கீழ் வரும்.
நாளை நடக்கும் இந்த மாவட்ட தொடக்க விழாவிற்கு வருவாய்த்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமை வகிக்கிறார். மத்திய அமைச்சர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், இளங்கோவன், தமிழக அமைச்சர்கள் பொங்கலூர் பழனிசாமி, மு.பெ.சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
விழாவில், தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய திருப்பூர் வரைபடத்தை வெளியிட்டு, மாவட்டத்தை துவக்கி வைக்கிறார்.
புதிய மாவட்ட துவக்க விழாவில், மாநகராட்சி மேயர் செல்வராஜ், எம்.பி.க்கள் சுப்பராயன், பிரபு, கார்வேந்தன், எம். எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, செ.ம.வேலு சாமி, எஸ்.மணி, சண்முகவேலு, பிரபாவதி, பிரேமா, விடியல் எஸ்.சேகர், பொன்னுதுரை உள்ளிட்பட பலர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.