வருகிறது பிஎஸ்-4 தரக்கட்டுப்பாடு
டெல்லி: இந்திய வாகனங்களை சுற்றுப்புற சூழலின் நண்பனாக்கும் முயற்சியில் இந்திய அரசு அடுத்த கட்டத்துக்கு முன்னேறியுள்ளது. பாரத் ஸ்டேஜ் 4 எனப்படும் பிஎஸ்-4 தரக்கட்டுப்பாட்டை அறிமுகம் செய்துள்ளது.
பிஎஸ்-1 தரக்கட்டுபாடு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்டது. பிஎஸ்-2 மூலம் இந்திய வாகனங்களில் கந்தகத்தின் அளவு 500 பிபிஎம் அளவுக்கு குறைவாக இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது.
இதை தொடர்ந்து பிஎஸ்-3 தரக்கட்டுப்பாடு கடந்த 2005 ஏப்ரல் 1ம் தேதி கொண்டு வரப்பட்டு தற்போது வழக்கில் உள்ளது. அடுத்து வரவிருக்கும் பிஎஸ்-4, ஐரோப்பிய தரக்கட்டுபாட்டு நிறுவனங்களுக்கு இணையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும் என தெரிகிறது.
இது 2010 ஏப்ரலுக்குள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இதற்குள் அனைத்து ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்களும் இந்த தரக்கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட விதிகளை பின்பற்றும் வகையில் வாகனங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விஷயத்தில் இந்துஸ்தான் நிறுவனத்துக்கு மட்டும் சிறிய நடைமுறை சிக்கல் இருப்பதாகவும், மற்ற அனைவரும் இதற்கு ஓரளவு தயாராகிவிட்டார்கள் எனவும் கூறப்படுகிறது.
மாருதி நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆல்டோ மற்றும் மாருதி 800 கார் தயாரிப்பில் சின்ன பின்னடைவு உள்ளது. மற்ற மாடல்களை பிஎஸ்-4 தரத்துக்கு மாற்றுவதில் எந்த பிரச்சினையும் இல்லை.
ஏற்கனவே பொருளாதார மந்தம் காரணமாக பெருத்த அடி வாங்கிருக்கும் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு பிஎஸ்-4 தரக்கட்டுப்பாட்டில் கார்கள் தயாரிக்க கூடுதல் செலவாகும் என சில தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் விலை லேசாக உயரும். ஏற்கனவே வாங்க ஆளி்ல்லாத நிலையில் விலையை ஏற்றினால் என்ன செய்வது என அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனத்தினர் யோசித்து வருகின்றனர்.