அரசு விழாவில் எம்.எல்.ஏ. ரகளை - தேடுகிறது போலீஸ்
சங்கரன்கோவில்: அரசு விழா அழைப்பிதழில் தனது பெயர் போடாததால் சங்கரன்கோவில் அதிமுக எம்.எல்.ஏ. கருப்பசாமி தனது ஆதரவாளர்களுடன் பெரும் ரகளையில் ஈடுபட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சங்கரன்கோவில் யூனியன் பகுதிகளில் ரூ.5 கோடி மதிப்பிலான கட்டமைப்பு பணிகளை துவக்கி வைத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கான விழா மற்றும் யூனியன் அலுவலகத்தி்ல் புதிதாக கட்டப்பட்டுள்ள ரூ.14 லட்சம் மதிப்பிலான கட்டிட திறப்பு விழா ஆகிய நிகழ்ச்சிகள் இன்று மாலை 4 மணிக்கு யூனியன் அலுவலக வாளகத்தில் நடைபெறுகிறது.
விழாவை முன்னிட்டு அலுவலக வாளக பகுதியில் மேடை அமைக்கப்பட்டு அலுவலகம் முழுவதும் பந்தல் போடப்பட்டிருந்தது. நெல்லை கலெக்டர் பிரகாஷ் தலைமையில் தமிழக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் தமிழரசி பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
விழாவிற்கான அழைப்பிதழ்களை மாவட்ட செய்தி ஒளிபரப்புத் துறையினர் அச்சடித்துள்ளனர். இதில் சங்கரன்கோவில் சட்டமன்ற அதிமுக உறுப்பினர் கருப்பசாமி வாழ்த்துரை வழங்குவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது..
இதனால் ஆத்திரமடைந்த கருப்பசாமி எம்எல்ஏ இன்று காலை 10 மணிக்கு 20க்கும் மேற்பட்டவர்களுடன் கும்பலாக விழா நடைபெறும் யூனியன் அலுவலக வாளகத்திற்குள் புகுந்தார். பின்னர் அங்கு போடப்பட்டிருந்த பந்தல், மேடை, டியூப் லைட் மற்றும் நாற்காலிகளை அடித்து நொறுக்கினர்.
ஆத்திரம் அடங்காத அவர்கள் விழா அலங்காரத்திற்காக வைத்திருந்த வாழைகளையும் வெட்டி சாய்த்தனர்.
இதைப்பார்த்ததும் விழா ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த யூனியன் பணியாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்ததும் தாலுகா காவல் நிலைய போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.
இதையடுத்து அதிமுக தலைமையிலான எம்எல்ஏ கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது. இதுபோல் எம்எல்ஏ சொந்த ஊரான புளியம்பட்டி விலக்கு பகுதியி்ல் அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுகள் வெட்டி சாய்க்கப்பட்டு தீ வைக்கப்பட்டது.
இதனால் அப்பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. போலீஸார் ரகளையில் ஈடுபட்ட எம்.எல்.ஏவையும், அவரது ஆதரவாளர்களையும் தேடி வருகின்றனர்.