கார் - லாரி மோதலில் வங்கி மேலாளர், டிரைவர் பலி
கயத்தாறு: நெல்லை மாவட்டம் கயத்தாறு அருகே நடந்த சாலை விபத்தில் வங்கி மேலாளரும், கார் டிரைவரும் பலியானார்கள்.
கோவை மாவட்டம் ராதாபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவகுருநாதன். இவருடைய மகன் சண்முகசுந்தரம். இவர் திருப்பூரில் வங்கி மேலாளராக பணிபுரிந்து வந்தார்.
வேலை விஷயமாக சண்முகசுந்தரம் நாகர்கோவிலுக்கு காரில் புறப்பட்டார். திருப்பூர் ஆசிரியர் காலனியை சேர்ந்த டிரைவர் ரவிசந்திரன் காரை ஓட்டினார்.
இன்று அதிகாலை 5 மணி அளவில் கயத்தாறு அடுத்த வடக்கு இலந்தைகுளம் அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது கோவில்பட்டி நோக்கி சென்ற லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இதில் சண்முகசுந்தரமும், ரவிசந்திரனும் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்த தகவலின் பேரில் கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று விபத்தில் பலியானவர்களின் உடல்களை மீட்டனர்.
பின்னர் பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. விபத்து நடந்தவுடன் தப்பியோடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.