தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சீமான் கைது?
புதுச்சேரி: நெல்லையில் கைது செய்யப்பட்ட இயக்குநர் சீமான் புதுச்சேரி சிறையில் 15 நாள் காவலில் அடைக்கப்பட்டார். அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய புதுவை காங்கிரசார் தீவிர நெருக்கடி தந்து வருகிறார்கள்.
புதுச்சேரியில் கடந்த 12-ந் தேதி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மத்தியில் இயக்குநர் சீமான் பேசினார். அப்போது அவர் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாவும், உடனே கைது செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் போலீசாரை வற்புறுத்தினர். உடனே ஒதியஞ்சாலை போலீசார், ஜாமீனில் வர முடியாத பிரிவின் கீழ் சீமான் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை இயக்குனர் சீமான் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மஞ்சுநாதா முன்னிலையில் சரண் அடைந்தார். புதுச்சேரி போலீசாரின் கோரிக்கையை ஏற்று அவர் மதுரையில் புதுச்சேரி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
புதுச்சேரி சிறையில்...
சீமானை இரவோடு இரவாக போலீசார் புதுச்சேரிக்கு அழைத்து வந்தனர். நேற்று அதிகாலை 6 மணியளவில் லாஸ்பேட்டை புறக்காவல் நிலையத்துக்கு சீமானை அழைத்து சென்றனர். அங்கு அவரை சிறைக்கு அனுப்புவதற்கான ஆவணங்களை போலீசார் தயார் செய்தனர்.
பின்னர் லாஸ்பேட்டை நீதிபதி குடியிருப்பில் உள்ள புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பொங்கியப்பன் முன்னிலையில் சீமானை ஆஜர்படுத்தினர். சீமானை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி பொங்கியப்பன் உத்தரவிட்டார்.
அப்போது நீதிபதியிடம் சீமான் தான் வருமானவரி கட்டுவதால் தனக்கு ஜெயிலில் முதல் வகுப்பு அறை ஒதுக்கும்படி கேட்டுக் கொண்டார். அதற்கு போலீசார் பார்த்து கொள்வார்கள் என்று நீதிபதி கூறினார். இதையடுத்து காலாப்பட்டு மத்திய சிறைச்சாலையில் அடைக்க சீமானை போலீசார் அழைத்து சென்றனர்.
மணிவண்ணன் சந்திப்பு
அப்போது சிறை வாசலில் நின்று கொண்டு இருந்த இயக்குநரும் நடிகருமான மணிவண்ணன், சீமானை சந்தித்து பேசினார். அதன் பிறகு சீமான் சிறையில் அடைக்கப்பட்டார். சீமான் லாஸ்பேட்டை நீதிபதி குடியிருப்புக்கு அழைத்து வரப்படுவதை அறிந்த புதுச்சேரி பெரியார் திராவிடர் கழகத்தினர் அங்கு திரண்டனர்.
சீமானை போலீசார் நீதிபதியிடம் ஆஜர் செய்து வெளியில் அழைத்து வந்த போது அவர்கள் தனி ஈழத்துக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பினர். ஜீப்பில் ஏற்றப்பட்ட சீமான் மீது அவர்கள் மலர்களை தூவி வாழ்த்து தெரிவித்தனர்.
முதல் வகுப்பு இல்லை!
புதுச்சேரி சிறையில் முதல் வகுப்பு வசதி இல்லை. இதனால் ஜெயில் வளாகத்தில் அமைந்துள்ள மருத்துவமனை தனி அறையில் சீமான் அடைக்கப்பட்டார். சீமானுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் மின் விசிறி, ரேடியோ, கட்டிலுடன் கூடிய படுக்கை வசதிகள் உள்ளன. மேலும் அவருக்கு வெளியில் இருந்து உணவை வரவழைத்து சாப்பிடவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது?
சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தி இருந்தார்.
இது பற்றி சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீகாந்திடம் கேட்ட போது, இது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.