கஞ்சா வாங்கித் தராத நண்பரைக் கொன்ற இளைஞர்!
மதுரை: மதுரையில் கஞ்சா வாங்கித் தராததால் ஆத்திரமடைந்த இளைஞர், தனது நண்பரை கொன்ற கொடூரம் அரங்கேறியுள்ளது.
மதுரை கோரிப்பாளையம் அருகே உள்ளது ஆழ்வார்புரம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் அருண்குமார் (18) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (27). இருவரும் நண்பர்கள்.
இருவருக்கும் வெகு நாட்களாக கஞ்சா பயன்படுத்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில், தனக்கு கஞ்சா வாங்கித் தருமாறு அருண்குமாரிடம் ராதாகிருஷ்ணன் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்துவிட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ராதாகிருஷ்ணன் குஸ்தி பொட்டல் காடு என்ற பகுதியில் அருண்குமார் இருப்பதை அறிந்து அங்கு சென்று அவர் தலை மீது கல்லைப் போட்டு கொலை செய்துள்ளார்.
தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் ராதாகிருஷ்ணனின் பைக்கை அடித்து நெறுக்கினர். மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராதாகிருஷ்ணனை வலை வீசி தேடி வருகின்றனர்.