கோடை: மின்வெட்டு வராதாம்-ஆற்காடு சொல்கிறார்
சென்னை: வரும் கோடை காலத்தில் தட்டுப்பாடு இல்லாமல் மின்சாரம் வழங்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் இந்த ஆண்டு கோடை காலத்தில் மின் தட்டுப்பாடு வராது என்றும் சட்டசபையில் இன்று மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.
கேள்வி நேரத்தின்போது அவர் அளித்த பதில்:
தமிழ்நாட்டில் மின் உற்பத்தியை அதிகரிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 2006ம் ஆண்டுக்கு பிறகு திருவள்ளூரில் 1,400 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் நிலையமும், வடசென்னையில் 1,200 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் நிலையமும், மேட்டூரில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிலையமும் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த மின் நிலையங்களில் 2011ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மின் உற்பத்தி தொடங்கிவிடும். இதுதவிர உடன்குடியில் 1,600 மெகாவாட் மின்சாரமும், தூத்துக்குடியில் 1,000 மெகாவாட் மின்சாரமும், ஜெயங்கொண்டத்தில் 1,600 மெகாவாட் மின்சாரமும், செய்யூரில் 400 மெகாவாட் மின்சாரமும் தயாரிக்கும் மின் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இந்தப் பணி கள் 2012ல் முடிவடையும்.
இந்திய வரலாற்றில் முதன் முறையாக தமிழ்நாட்டுக்கு 8 மின் திட்டங்களுக்கு மத்திய அரசு 45,000 கோடிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
வரும் கோடை காலத்தில் தட்டுப்பாடு இல்லாமல் மின்சாரம் வழங்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தற்போது வெளி மாநிலங்களிலிருந்து 1,000 மெகாவாட் மின்சாரம் பெறப்படுகிறது. கோடை காலத்தில் தேவைப்பட்டால் மேலும் 500 மெகாவாட் மின்சாரம் பெறப்படும்.
எனவே இந்த ஆண்டு கோடை காலத்தில் மின் தட்டுப்பாடு வராது.
மின் ஒப்பந்த தொழிலாளர்கள் 21,600 பேரில் 18,000 பேருக்கு பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு அடுத்த ஆண்டு நிரந்தர பணி வழங்கப்படும் என்றார்.