பழியை துடைத்த ரஹ்மான்-வைரமுத்து வாழ்த்து!
சென்னை: இரண்டு ஆஸ்கர் விருதுகள் பெற்ற முதல் இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு பாடலாசிரியர் வைரமுத்து தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அவருக்கு கவியரசு வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு தமிழன் இந்தியாவுக்கு ஈட்டித் தந்திருக்கும் மிகப்பெரிய பெருமை இது. ஏ.ஆர்.ரகுமான் என்ற மாபெரும் இசைக் கலைஞனின் உழைப்புக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி, சர்வதேச அங்கீகாரம்.
அவர் இன்னும் பல விருதுகளை பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். பொதுவாக மூன்றாம் உலக நாடுகள் ஆஸ்கர் விருதுகளால் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டே வந்தன. அந்தப் பழியை இந்த விருது துடைத்திருக்கிறது.
ஏ.ஆர்.ரகுமானின் இந்த விருதால், தமிழகத்தின் பெருமை, இந்தியாவின் பெருமை, உலகக் கலையுலகில் வெளிச்சத்தை காட்டியிருக்கிறது. மீண்டும் மீண்டும் ஏ.ஆர்.ரகுமானுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன், என்று கூறியுள்ளார் வைரமுத்து.