''எல்லாப் புகழும் இறைவனுக்கே'': ஆஸ்கர் மேடையில் தமிழில் பேசிய ரஹ்மான்
லாஸ் ஏஞ்செல்ஸ்: 81வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 6.00 மணிக்குத் தொடங்கியது.இதில், ரஹ்மானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான (ஒரிஜினல் ஸ்கோர்) ஆஸ்கர் விருது மற்றும் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருது ('ஜெய் ஹோ') வழங்கப்பட்டது.
விருதைப் பெற்ற பின் ரஹமான் பேசுகையில்,
நான் இங்கு ஒருவித அச்சத்துடனும் அதே நேரத்தில் பெரும் மகிழ்ச்சியுடனும் வந்தேன். ஏதோ என் திருமணத்துக்கு வருவது போல படபடப்பாய் இருந்தது. இந்த விருதுக்குக் காரணம் என் தாயின் ஆசிர்வாதம். எனக்கு என் தாயைத் தவிர வேறு எதுவும் பெரிதில்லை. இந்த அரங்கில் அவரும் அமர்ந்திருக்கிறார். அவருக்கு நன்றி, அவரது ஆசிர்வாதத்துக்கு நன்றி. விருது வழங்கிய அகாடெமிக்கும் என் நன்றிகள்.
எனது இசைக் கலைஞர்கள், இந்தப் படத்தில் பணியாற்றியவர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த வாய்ப்பைத் தந்த இயக்குனர் போய்ல், மும்பைக்கும் நன்றி.
இந்தப் படத்தின் மையக் கருத்தே நம்பிக்கை தான். என் வாழ்நாள் முழுவதும் எனக்கு அன்பு செலுத்தவும், பகைத்துக் கொள்ளவும் வாய்ப்புகள் கிடைத்தன். நான் அன்பையே தேர்வு செய்தேன். கடவுள் நம்மோடு இருக்கையில் நமக்கு எல்லாம் கிடைக்கும்.
இந்த விருதை என் தாயகமான இந்தியாவுக்கு அர்ப்பணிக்கிறேன் என்ற ரஹ்மான், நான் தமிழில் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன் என்று கூறிவிட்டு,
''எல்லாப் புகழும் இறைவனுக்கே'' என்று ஆஸ்கர் மேடையில் தமிழில் பேசி தனது தமிழ் பற்றையும் காட்டினார்.
பின்னர் இந்திய தொலைக்காட்சி நிருபர்களிடம் பேசிய ரஹ்மான், என் சொந்த ஊரில் (சென்னை) உள்ள உங்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி, இந்த விருதை இந்தியாவுக்கு சமர்பிக்கிறேன் என்றார் தமிழில்.