நாயுடு Vs நாயுடு Vs சிரஞ்சீவி
காங்கிரஸ், தெலுங்கு தேசம்-தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, பாஜக, சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் என நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது.
இந் நிலையில் ஹைதராபாத்தில் நிருபர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு,
தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு தேர்தல் பிரசாரத்தின் போது அத்வானி பிரதமராவதை எப்படியாவது தடுத்து நிறுத்துவோம் என்று பேசி வருகிறார்.
யாரை திருப்திபடுத்துவதற்காக அவர் இப்படி பேசுகிறார் என்று தெரியவில்லை.
ஆந்திராவில் பாஜகவுக்கென ஒரு ஓட்டு வங்கி உள்ளது. அதைப் பயன்படுத்தி சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வர விடாமல் தடுத்து நிறுத்துவோம்.
1991ம் ஆண்டு சந்திரபாபு நாயுடு பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் தான் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. அதை அவர் இப்போது மறந்து விட்டார்.
தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் சுய லாபத்திற்காக சந்திரபாபு நாயுடுவுடன் கூட்டணி வைத்துள்ளார். சந்திரபாபு நாயுடு தெலுங்கானாவை தீவிரமாக எதிர்ப்பவர்.
அவர் ஒரு போதும் தெலுங்கானா தனி மாநிலத்தை ஆதரிக்கவே மாட்டார். எனவே தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தெலுங்கு தேசம் கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கப்படும். பிரஜா ராஜ்ஜியம் கட்சியின் தலைவர் சிரஞ்சீவி பேசும்போதெல்லாம் பாஜக மதவாதக் கட்சி என்கிறார்.
இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவருடன் நாங்கள் கூட்டணி வைக்க எந்தவித முயற்சியும் செய்யவில்லை. ஆனால் அவர் மதவாத கட்சியான பாஜகவுடன் கூட்டணி சேர மாட்டேன் என்று திரும்ப திரும்ப கூறி வருகிறார். அவருக்கு தேர்தல் நேரத்தில் பாஜக தொண்டர்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றார் நாயுடு.
மத்தியி்ல் பாஜக ஆட்சியில் இருந்தபோது அதை வெளியில் இருந்து ஆதரித்து வந்த தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு பெரும் செல்வாக்குடன் இருந்தது குறிப்பிடத்தக்கது. மக்களவைத் தேர்தல் தேதியை முடிவு செய்வது தொடர்பாக கூட்டணிக் கட்சிகளை எல்லாம் ஒதுக்கிவி்ட்டு இவரிடம் மட்டுமே ஆலோசனை நடத்தினார் அப்போதைய துணை பிரதமர் அத்வானி.
ஆனால், அந்தத் தேர்தலில் தெலுங்கு தேசம் மண்ணைக் கவ்வியதையடுத்து பாஜகவுடனான உறவை முறித்துக் கொண்டார் நாயுடு என்பது குறிப்பிடத்தக்கது.
பணம் சம்பாதிக்க வந்த சிரஞ்சீவி- சந்திரபாபு:
இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு,
ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவ் ஏராளமான படங்களில் நடித்து ஆந்திர மக்களின் மனதை கவர்ந்தவர். அவர் சினிமாவில் நடித்த்தபோதே அவருக்கு மக்களிடம் அரசியல் செல்வாக்கு இருந்தது.
இதனால் தான் அவர் 1982ல் தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கிய 9 மாதங்களில் ஆட்சியை பிடித்தார்.
அப்படிப்பட்ட மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவருடன் இப்போது அரசியலுக்கு வந்த நடிகர் சிரஞ்சீவியை ஒப்பிடுகிறார்கள். இது மகா தவறு. ராமராவ் போல சிரஞ்சீவியால் அரசியலில் வெற்றி பெறவே முடியாது.
ராமராவ் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அரசியலுக்கு வந்தவர். ஆனால் இப்போது அரசியலுக்கு வரும் தலைவர்கள் எல்லோரும் சம்பாதிக்க வேண்டும் என்று தான் வருகிறார்கள் என்றார்.