சுவாமி மீது அழுகிய முட்டை-வக்கீலுக்கு ஜாமீன்
சென்னை: உயர் நீதிமன்றத்தில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி மீது முட்டை வீசியதாகக் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் ஜினிலியோ இம்மானுவேலுவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவிலை அரசு கையகப்படுத்தியதை எதி்ர்த்து தீட்சிதர்களுக்கு ஆதரவாக மனு தாக்கல் செய்ய வந்த கடந்த 17ம் தேதி நீதிமன்றம் வந்த சுவாமிக்கு அடி-உதை விழுந்தது. கோர்ட் ஹாலின் கதவை உள்பக்கமாகப் பூட்டிக் கொண்டு அவரை வழக்கறிஞர்கள் தாக்கினர். அவர் மீது அழுகிய முட்டைகளும் வீசப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பாக எஸ்பிளனேடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் 3வது எதிரியாக சேர்க்கப்பட்டுள்ள வழக்கறிஞர் ஜினிலியோ இம்மானுவேல் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து இம்மானுவேல் ஜாமீன் கோரி முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் மனு செய்தார். அந்த மனு மீதான விசாரணை நீதிபதி தேவதாஸிடம் வீட்டில் நேற்று நடந்தது.
உயர் நீதிமன்ற சம்பவம் தொடர்பாக யாரையும் கைது செய்ய வேண்டாம் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஜினிலியோ இம்மானுவேலுவை ஜாமீனில் விடுவிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.