இலங்கைக்கு பயிற்சியோ, ரேடாரோ தரவில்லை-காங்.
சென்னை: இலங்கை ராணுவத்துக்கு இந்தியா பயிற்சியோ, ரேடார்களையோ வழங்கவில்லை என்று சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூறினர்.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீது நடந்த விவாதம்:
நெடுஞ்செழியன் (பாமக): இலங்கையில் தமிழர்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தி வரும் சூழலில், இலங்கை அரசுக்கு இந்திய அரசு ரேடார் தரலாமா? சென்னையில் இலங்கை ராணுவத்தினருக்கு ஆயுதப் பயிற்சி தரலாமா?
(இதற்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் எழுந்து நின்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்)
ஞானசேகரன் (காங்கிரஸ்): பாமகஉறுப்பினர் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை கூறிக் கொண்டே போகிறார். இலங்கைக்கு இந்தியா ரேடாரும் அளிக்கவில்லை. அவர்களது ராணுவத்தினருக்கு பயிற்சியும் அளிக்கவில்லை என மறுத்தாலும் புதிய கதையை இங்கே கூறிக் கொண்டே இருக்கிறார்கள்.
சுதர்சனம் (காங்கிரஸ்): இலங்கைக்கு ராணுவ உதவி செய்யவில்லை. ஆயுதம் வழங்கவில்லை என்றார்.
உங்கள் கார் வேண்டாம்-அதிமுக:
அதே போல ஏழை விவசாயிகளுக்கு இலவச நிலம் வழங்குவது, எம்எல்ஏக்களுக்கு கார் வழங்குவது தொடர்பாக அதிமுக எம்எல்ஏக்களுக்கும் அமைச்சர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டது. அதன் விபரம்:
அருண்மொழித்தேவன் (அதிமுக): கடந்த பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் பல இன்னமும் அறிவிப்புகளாகவே உள்ளன. எம்எல்ஏக்களுக்கு கார் அளிக்கப்படும் என்று சொன்னீர்கள். அது இப்போது எந்த நிலையில் உள்ளது.
அமைச்சர் துரைமுருகன்: மொத்தத்தில் எம்எல்ஏக்களுக்கு கார் வேண்டும் என்பதை அதிமுகவின் கொள்கை என எடுத்துக் கொள்ளலாம். இந்த நல்ல விஷயத்தை அதிமுக உறுப்பினரே சொல்லியிருக்கிறார்.
செங்கோட்டையன் (அதிமுக): உங்கள் அறிவிப்புகள் காற்றில் பட்டமாக பறந்து கொண்டிருக்கின்றன. உங்கள் கார் எங்களுக்குத் தேவையில்லை.
அருண்மொழித்தேவன்: உங்களது அறிவிப்புகள் பெயரளவுக்கு உள்ளன என்று கூறுவதற்காகத்தான் காரை பற்றி கூறினேன். தமிழகத்தில் சாப்ட்வேர் ஏற்றுமதி குறைந்துள்ளது. அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூட, மென்பொருள் துறையில் முதலீடு செய்ய வேண்டாம் என்று பேசியிருக்கிறார்.
அமைச்சர் ஆற்காடு வீராசாமி:- அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி காரணமாக தகவல் தொழில்நுட்பத் துறையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதனால் வேறு தொழில்களில் முதலீடு செய்யுங்கள் என்றுதான், சமீபத்தில் நடந்த மாநாட்டில் தெரிவித்தேன். தவறாக ஒன்றும் கூறவில்லை.
அருண்மொழித்தேவன்: நீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கே பாதுகாப்பில்லை.
அமைச்சர் துரைமுருகன்: போலீசாருக்கும், வக்கீல்களுக்கும் நடந்த மோதலின்போது கல் வீசப்பட்டதால்தான் நீதிபதி ஆறுமுக பெருமாள் ஆதித்தனுக்கு காயம் ஏற்பட்டது. நீதிபதியின் மருமகன் வீட்டில் கஞ்சா வைப்பது, நீதிபதி அசோக்குமாரை கார் ஏற்றி கொல்ல முயற்சித்தது போன்ற சம்பவங்கள்தான் (இவை அதிமுக காலத்தில் நடந்த சம்பவங்கள்) நீதிபதிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை காட்டுவதாக உள்ளது.
(இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் கூச்சலிட்டனர்).
அருண்மொழித்தேவன்): சமீபத்தில், கூட்டங்களில் பிரச்சனை ஏற்படுத்தும் விதத்தில் பேசிவரும் ஒருவரை (சீமான்) கைது செய்ய தனிப்படை அமைத்தீர்கள். ஆனால் அவரை கைது செய்ய முடியவில்லையே?
அமைச்சர் ஆற்காடு வீராசாமி: அவர் கைது செய்யப்பட்டுவிட்டார்.
அருண்மொழித்தேவன்: 5 தனிப்படைகள் அவரை பிடிக்கவில்லை. அவரே வந்து சரண்டர் ஆனார்.
அமைச்சர் துரைமுருகன்:- அந்த வழக்கு பாண்டிச்சேரி தொடர்புடையது. நாம் நேரடியாக போய் கைது செய்ய முடியாது.
அருண்மொழித்தேவன்: வெள்ள நிவாரணம், கட்சி பார்த்து கொடுக்கப்படுகிறது. இலவசமாக நிலம் தரும் திட்டம் பல இடங்களில் சரியாக செயல்படுத்தப்படவில்லை. இந்த பட்ஜெட்டிலும் அது பற்றி ஒன்றும் சொல்லப்படவில்லை.
அமைச்சர் பெரியசாமி: வெள்ள நிவாரணத்தை பொறுத்தவரை இதுவரை ரூ.1,033 கோடி நிவாரணம் தரப்பட்டுள்ளது. வெள்ள நிவாரணம் எந்த இடத்தில் சரியாக தரப்படவில்லை என்று குறிப்பிட்டுச் சொல்லுங்கள். பொத்தாம் பொதுவாக சொல்லாதீர்கள். இதுவரை நிலமில்லாதவர்களுக்கு, 2 லட்சம் ஏக்கர் இலவச நிலம் வழங்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் (ஜெயலலிதா) தொகுதியில் கூட நிறைய இடங்களில் கொடுத்துள்ளோம் என்று எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கே (ஓ.பன்னீர்செல்வம்) தெரியும்.
ஓ.பன்னீர்செல்வம்:-அருண்மொழித்தேவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள். என்னை ஏன் தேவையின்றி சாட்சியாக புகுத்துகிறீர்கள்.
அமைச்சர் பெரியசாமி:- அவைக்குறிப்பில் உள்ளதைத் தான் நான் கூறினேன்.
இவ்வாறு விவாதம் நடந்தது.