ரஹ்மான்-பூக்குட்டி 'ரோல் மாடல்கள்'-ஜெ. வாழ்த்து
சென்னை: இரு ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ளதன் மூலம் தமிழ்நாட்டின் பெருமையை ஏ.ஆர்.ரகுமான் நிலைநாட்டிவிட்டார் என்று
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தி:
2 ஆஸ்கார் விருதுகளை பெற்றதற்காக உங்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கிறேன். நீங்கள் ஒரு ஆஸ்கார் விருதாவது பெறுவீர்கள் என்று கருதினோம்.
கோல்டன் குளோப்' விருது பெற்றதற்கு பிறகு அந்த நம்பிக்கை அதிகரித்தது. உங்களுக்கே உரித்தான பாணியில் ஒரு விருது அல்ல 2 ஆஸ்கார் விருதுகளை பெற்று தந்திருக்கிறீர்கள். தமிழ்நாடு, இந்தியாவின் பெருமையை நிலை நாட்டி இருக்கிறீர்கள்.
உங்கள் சாதனை மூலம் உங்கள் தாயார், மனைவி குடும்பத்தினர் மிக மகிழ்ச்சியில் இருப்பார்கள். இந்த மகிழ்ச்சியில் நானும் பங்கேற்கிறேன்.
அதே போல ஆஸ்கர் வென்ற ரசூல் பூக்குட்டியையும் நான் பாராட்டி மகிழ்கிறேன். இளம் தலைமுறையினருக்கு இந்த இருவரும் ஒரு முன் மாதிரி. இவர்களிடமிருந்து இளம் தலைமுறையினர் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.
இந்தியர்கள் மாபெரும் திறமையாளர்கள் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வந்திருக்கின்றனர். விஸ்வநாதன் ஆனந்தும், அபினவ் பிந்த்ராவின் நாட்டின் பெருமையை உயர்த்தி்ப் பிடித்தார்கள்.
அந்த வரிசையில் ரஹ்மானும் பூக்குட்டியும் நம்மை பெருமையடையச் செய்துள்ளனர் என்று கூறியுள்ள ஜெயலலிதா, ஸ்லம்டாக் மில்லினர்' படக் குழுவினருக்கும் தனியாக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அரசு இழப்பீடு வழங்குமா?:
ஜெயலலிதா விடுத்துள்ள இன்னொரு அறிக்கையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த மோதல் சம்பவத்தில் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு அரசு இழப்பீடு வழங்குமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்த அறிக்கையில்,
திமுக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஒரே அடிப்படையில் "உண்ணாவிரதம்'' தொடங்கப் போவதாக அறிவித்ததோடு மட்டுமல்லாமல், சட்டத்தை நிலை நாட்ட வேண்டிய ஒரு முதல்வர் காவல் துறையினருக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
இது போன்ற ஒரு முதல்வரை இந்திய நாடு இதுவரை கண்டதில்லை.
அடித்தட்டிலே உள்ள ஏழை, எளிய மக்களுக்கு எல்லா வகையான சாதனைகளையும் செய்ய வேண்டும் என்பது தான் தனது எண்ணம் என்று கருணாநிதி தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். கடுமையான மின் தட்டுப்பாடு, விஷம் போல் ஏறும் விலைவாசி, சட்டம்-ஒழுங்கு சீரழிவு, தொழில் வளர்ச்சியின்மை, விவசாய உற்பத்தியின்மை, வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை என கருணாநிதி ஆட்சியின் சாதனைகளை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.
தற்போதுள்ள சூழ்நிலையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையை கலைத்து விடுவது தான் நல்லது என்பதை திமுக அரசின் முதல்வர் கருணாநிதிக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.