ரஹ்மானுக்கு ஆஸ்கர்: உரிமை கொண்டாடும் காங்!
மும்பை: எதில்தான் அரசியல் என்ற வரைமுறையே இல்லாமல் போய் விட்டது. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது கிடைக்க ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியே காரணம் என காங்கிரஸ் கட்சியும் வரிந்து கட்டியுள்ளது.
இது தேர்தல் காலம். எனவே ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைத்தாலும் கூட அதை வைத்து சந்தில் சிந்து பாடு அரசியல் கட்சிகள் காத்துள்ளன.
அந்த வகையில் இப்போது அவர்களின் கையில் ஆஸ்கரும், ஏ.ஆர்.ரஹ்மானும் சிக்கியுள்ளனர். ஆஸ்கர் விருது கிடைக்க ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் சிறப்பான ஆட்சியே காரணம் என காங்கிரஸ் கூறியுள்ளது. அதேபோல பாஜகவும் ரஹ்மானைப் பாராட்டி தனது பாசத்தை வெளிப்படுத்தியுள்ளது.
மும்பையில் நடந்த பாஜக கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் வேட்பாளர் அத்வானி பேசுகையில், மேடையில் ஸ்லம்டாக் படத்தில் இடம் பெற்ற ஜெய் ஹோ பாடலைப் போட்டு கலக்கினர்.
பின்னர் அத்வானி பேசுகையில், தீவிரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் மும்பை உலக சமுதாயத்தினரின் கண்களில் விழுந்தது. இப்போது மீண்டும் உலகமே மும்பை பக்கம் திரும்பியுள்ளன. ஆனால் இப்போது நல்ல விஷயத்திற்காக என்பது மகிழ்ச்சிக்குரியது.
இந்தியா சினிமாவில் இது மிகவும் முக்கியமான மைல் கல்லாகும். ஏ.ஆர்.ரஹ்மான் மேலும் பல சர்வதேச அங்கீகாரங்களைப் பெறுவார். அந்த நாள் வந்து விட்டது என்றார்.
சாதனை செய்யக் கூடிய வகையில் இந்தியாவை மாற்றியிருக்கிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. அந்த வகையில் ரஹ்மான் உள்ளிட்ட இந்தியக் கலைஞர்களுக்குக் கிடைத்த வெற்றியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் பெருமை கொள்கிறது என்று காங்கிரஸ் கூறியுள்ளது.