ஆஸ்கர் வென்ற இந்தியக் கலைஞர்களுக்கு நாடாளுமன்றத்தில் பாராட்டு
டெல்லி: ஆஸ்கர் விருது வென்ற ஸ்லம்டாக் மில்லியனர் மற்றும் ஸ்மைல் பிங்கி படங்களுக்கும், விருது வென்ற ஏ.ஆர்.ரஹ்மான், ரசூல் பூக்குட்டி, குல்சார் ஆகியோருக்கும் நாடாளுமன்றத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.சமீபத்தில் நடந்த ஆஸ்கர் விருது விழாவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், ரசூல் பூக்குட்டி மற்றும் குல்சர் ஆகியோர் விருது வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்கள். இதையடுத்து அவர்களுக்கு பாராட்டு மழை குவிந்து வருகிறது.
இந்நிலையில் லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி தனது பாராட்டு உரையில்,
ஆஸ்கர் விருது வென்றவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். ஸ்லம்டாக் மில்லியனர் மற்றும் ஸ்மைல் பிங்கி திரைப்பட குழுவினருக்கு எனது பாராட்டுக்களை தெரிவிக்கிறேன். ஸ்லம்டாக் மில்லியனர் 8 ஆஸ்கர் விருதுகள் வென்றது அரிய கவுரவம்.
மூன்று இந்தியர்கள் ஆஸ்கர் வென்றிருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இது இந்தியர்களின் உள்ளத்தை மகிழ செய்துவிட்டது. இந்தியர்களின் திறமைக்கு சர்வதேச அளவில் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என்றார் சோம்நாத் சட்டர்ஜி.
அதேபோல ராஜ்யசபாவிலும், ரஹ்மான் உள்ளிட்டோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. லோக்சபா தலைவர் ஹமித் அன்சாரி ரஹ்மான் உள்ளிட்டோருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தார்.