மூக்கறுப்பு-அத்வானியை சந்திக்க மறுத்த தாக்கரே
மும்பை: தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சு நடத்த வந்த பாஜக மூத்த தலைவரும் அக் கட்சியின் பிரதமர் வேட்பாளருமான அத்வானியை சிவசேனா தலைவர் பால் தாக்கரே சந்திக்க மறுத்துவிட்டார்.
இரு கட்சிகளுக்கும் இடையே நெடுங்காலமாகவே பிரச்சனை இருந்து வருகிறது. இந் நிலையில் நேற்று மும்பை வந்த அத்வானி, கூட்டணி குறித்துப் பேச பால் தாக்கரேவை சந்திக்க விரும்புவதாக தகவல் அனுப்பினார்.
ஆனால், அவரை சந்திக்க விரும்பவில்லை என்று பால் தாக்கரே தரப்பிலிருந்து மூக்கறுப்பு பதில் வந்தது. இதை எதிர்பாராத பாஜக தரப்பு அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
இந் நிலையில் தாக்கரேவை சந்திக்க அத்வானி எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என பாஜக மறுத்தது.
ஆனால், அதற்கு பதிலடி தரும் வகையில், நிருபர்களிடம் பேசிய சிவசேனை செய்தித் தொடர்பாளர் நீலம் கோரிஹே, தாக்கரேவை சந்திக்க அத்வானி முயன்றது உண்மை தான். ஆனால், முதலிலேயே இதற்கான அப்பாயின்மெண்ட்டை கேட்டிருக்க வேண்டும். அதை அத்வானி செய்யவில்லை என்றார்.
பாஜக கூட்டணியை விட சரத்பவாருடன் கூட்டணி அமைக்கவே தாக்கரே ஆர்வமாக உள்ளார். ஆனால், பவாரோ காங்கிரஸ் கூட்டணியில் நீடிக்கும் முடிவில் உள்ளார்.
மோடியை நீக்கக் கூடாது என்று சொன்னேன்-தாக்கரே:
இந் நிலையில் இன்று தனது கட்சியின் நாளிதழான சாம்னாவில் தாக்கரே எழுதியுள்ள கட்டுரையில்,
குஜராத்தில் நடந்த வன்முறைகளுக்குப் பின் முதல்வர் நரேந்திர மோடியை நீக்க பலர் முயற்சித்தனர். ஆனால், அவரை நீக்கக் கூடாது என்று அத்வானியிடம் நான் சொன்னேன்.
மோடி போனால் பாஜகவை விட்டு குஜராத் போய்விடும் என்று சொன்னேன் என்று கூறியுள்ளார்.