டி-சர்ட், சட்டையில் கட்சி சின்னம்-ஆணையம் தடை
கொல்கத்தா: வரும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் கட்சியின் சின்னம் பதித்த சட்டை மற்றும் டி-சர்ட் உள்ளிட்டவற்றை அணிந்து பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடக்கவிருக்கிறது. இதற்கான தேர்தல் தேதிகளை விரைவில் அறிவக்க போவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இன்னும் ஒரு மாதம் மட்டுமே முழுமையாக இருப்பதால் இந்தியா முழுவதும் உள்ள கட்சிகள் சுவர் பிடிக்கும் படலத்தில் இறங்கியுள்ளன.
இந்நிலையில் கொல்கத்தாவில் நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் மேற்கு வங்க தேர்தல் ஆணையாளர் தேபாஷிஸ் சென் கூறுகையில்,
கட்சி சின்னம் அல்லது வாசகங்களை பதித்த சட்டைகள், டி-சர்ட்கள் உள்ளிட்டவற்றை அணிந்து நாடாளுமன்ற தேர்தலின் போது யாரும் பிரச்சாரம் செய்யக் கூடாது. தொப்பி மற்றும் அங்கவஸ்திரம் போன்றவற்றில் வேண்டுமானால் கட்சி சின்னங்களை அணிந்து பிரச்சாரம் செய்யலாம்.
அதேபோல் அனுமதியின்றி அரசு சுவரில் விளம்பரங்கள் செய்வதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. தனியார் இடங்களில் ஒட்டப்படும் விளம்பரங்களுக்கு உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
விளம்பர செய்ய பயன்படுத்தக்கூடிய பொருட்கள் விரைவில் அழிந்துவிடும் வகையில் இருக்க வேண்டும். தேர்தல் முடிந்தவுடன் அந்தத்த கட்சியினரே அவற்றை சுத்தம் செய்துவிட வேண்டும்.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளை மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் தேபாஷிஸ் சென்.