பிரபல தடயவியல் நிபுணர் டாக்டர் மாலினி அதிரடி டிஸ்மிஸ்
நாட்டிலேயே மிகவும் பிரபலமான, புகழ் பெற்ற தடய அறிவியல் மையம் பெங்களூரில் உள்ளது. மடிவாளாவில் உள்ள இந்த மையத்தில்தான் பல்வேறு பிரபலமான வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனைகள் நடைபெற்றுள்ளன.
இந்த நிலையத்தில் இந்த மையத்தின் உதவி இயக்குநராகப் பணியாற்றி வரும் டாக்டர் மாலினியை பல்வேறு புகார்களின் அடிப்படையில் கர்நாடக அரசு டிஸ்மிஸ் செய்ய முடிவெடுத்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில் நடத்தப்பட்ட உண்மை கண்டறியும் சோதனையின்போது டாக்டர் மாலினி முறைகேடுகளில் ஈடுபட்டதாக சமீபத்தில் கேரள உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டியிருந்தது என்பது நினைவிருக்கலாம்.
இதுதவிர மேலும் பல்வேறு புகார்கள் டாக்டர் மாலினி மீது வரவே, அவரை டிஸ்மிஸ் செய்ய கர்நாடக அரசு முடிவெடுத்தது.
உண்மை கண்டறியும் சோதனைகள் தொடர்பான முடிவுகளை பலமுறை டாக்டர் மாலினி மீடியாக்களுக்கு கசிய விட்டதாகவும் புகார்கள் உள்ளன. மேலும் தனது பிறப்புச் சான்றிதழையும் கூட அவர் திருத்தி வேலையில் சேர்ந்ததாகவும் ஒரு புகார் உள்ளது.
மாலினியை டிஸ்மிஸ் செய்வது தொடர்பான முடிவை மாநில உள்துறை அமைச்சர் ஆச்சார்யா இன்று கர்நாடக மாநில மேலவையில் அறிவித்தார்.
இதற்கிடையே, மாலினி நடத்திய அனைத்து உண்மை கண்டறியும் சோதனைகள் குறித்தும் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என கர்நாடக எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு, ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு, பெங்களூர் தொடர் குண்டுவெடிப்பு, போலி முத்திரைத்தாள் மோசடி மன்னன் டெல்ஜி தொடர்பான வழக்குகள், டெல்லி சிறுமி ஆருஷி தல்வார் வழக்கு, தீவிரவாதி சபாபுதீன் (மும்பை தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாகவும் இவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்) உள்ளிட்ட வழக்குகளில் மாலினிதான் உண்மை கண்டறியும் சோதனைகளை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.