காங்கிரஸை மீண்டும் காப்பாற்றுவாரா ஜெய்ராம்!
கடந்த மக்களவைத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரத்தை முழுமையாக ஒருங்கிணைத்தவர் ரமேஷ்.
கடந்த தேர்தலின்போது ''இந்தியா ஒளிர்கிறது''.. என்ற பயங்கர கோஷத்துடன் மிக நம்பிக்கையாக பாஜக தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கி கலக்கிய நிலையில், காங்கிரஸ் மிகுந்த அச்சத்துடன் தான் பிரச்சாரத்தை ஆரம்பித்தது.
அப்போது ஜெய்ராம் தலைமையில் தான் காங்கிரஸ் சார்பில் பிரச்சார திட்டம், பிரச்சார வாசகங்கள், போஸ்டர் வாசகங்களை ஒருங்கிணைக்கும் குழுவை அமைத்தார் சோனியா காந்தி.
பாஜக ஆட்சியில் கிராமப்புறங்கள் புறக்கணிக்கப்பட்டதை கவனத்தில் கொண்டு ஊரக மக்களின் வாக்குகளை மையமாக வைத்து காங்கிரசி்ன் பிரச்சாரத்தை வகுத்தார் ஜெய்ராம்.
பாஜகவின் இந்தியா ஒளிர்கிறது கோஷத்தை கவுண்டர் செய்ய ஜெய்ராம் வகுத்த வாசகம் தான், காங்கிரசின் 'கை'.. சாதாரண மக்களுடன் (''காங்கிரஸ் கா ஹாத்.. ஆம் ஆத்மி கே சாத்'') என்ற கோஷம்.
இது கிராமப் பகுதிகளில் மிக நன்றாகவே ஒர்க்-அவுட் ஆனது. இந்தியாவில் வறுமை எல்லாம் ஒளிந்து நாடே ஒளிர ஆரம்பித்துவிட்ட என்றரீதியில் பாஜக செய்த பிரச்சாரத்தால் எரிச்சலில் இருந்த சோற்றுக்கே வழியில்லாத ஏழை-எளிய, கிராமப்புற மக்கள் பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்றினர்.
இந் நிலையில் இப்போதைய தேர்தலுக்கான காங்கிரசின் பிரச்சாரத் திட்டத்தை வகுக்கும் பணியும் ஜெய்ராம் ரமேஷிடம் வழங்கப்படவுள்ளது.
இதற்காக அவரை அமைச்சரவையிலிருந்து விலகுமாறு சோனியா உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து தனது மின்சாரம் மற்றும் வர்த்தகத் துறை இணை அமைச்சர் பொறுப்புகளை ஜெய்ராம் ரமேஷ் நேற்று ராஜிநாமா செய்தார்.
ராஜிநாமா கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் அனுப்பினார். பிரதமரின் பரிந்துரையின்பேரில் அவரது ராஜிநாமாவை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் உடனடியாக ஏற்றுக்கொண்டார்.
மும்பை ஐஐடியில் படித்த தொழில்நுட்ப நிபுணரான ரமேஷ், ஆந்திராவிலிருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.