தமிழகத்தில் 500 தாற்காலிக ஆசிரியர்கள் திடீர் நீக்கம்
சென்னை: தமிழகத்தில் துவக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வந்த, சுமார் 500 தாற்காலிக ஆசிரியர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதால் அந்தந்தப் பள்ளிகளின் பெற்றோர்-ஆசிரியர் கழகங்கள் மூலமும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலமும் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்களை நியமிக்க அரசு அனுமதித்தது.
இந்நிலையில் சமீபத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் துவக்கப் பள்ளிகளை அதிகாரிகள் ஆய்வு நடத்தியபோது, பல பள்ளிகளில், அரசு ஆசிரியர்கள் வேலை நேரத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பதும், தாற்காலிக ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து மாநிலம் முழுவதும் நியமிக்கப்பட்டுள்ள தாற்காலிக ஆசிரியர்களை உடனடியாக பணிநீக்கம் செய்யும்படி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் சுமார் 500 ஆசிரியர்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
தேர்வுகள் நடைபெறவுள்ள நிலையில் அரசின் இந்த அவசர முடிவால் மாணவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவது நிச்சயம்.
இதுகுறித்து தொடக்க கல்வி இயக்குநர் தேவராஜன் கூறுகையில், துவக்கப் பள்ளிகளுக்கு விரைவில் 6,000 இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இப்போது போதுமான ஆசிரியர்கள் உள்ளனர்.
சில மாவட்டங்களில் தலைமை ஆசிரியர்களிடம் அனுமதி பெற்று தொண்டு நிறுவனங்களால் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் சிலர், போதுமான கல்வித் தகுதி இல்லாமலும், தேவைக்கு அதிகமாகவும் இருந்ததால் அவர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்றார்.