ராமேஸ்வரம்-குஜராத் ரயில் நாளை துவக்கம்
சென்னை: ராமேஸ்வரத்தில் இருந்து குஜராத் மாநிலம் ஓஹா வரை செல்லும் வாராந்திர ரயிலை நாளை மத்திய ரயில்வே இணை அமைச்சர் வேலு கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.
மதுரையிலிருந்து மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள மன்மத் நகர் வரை சென்ற ரயில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ரயில்வே பட்ஜெட் மூலம் ராமேஸ்வரத்தில் இருந்து குஜராத் மாநிலம் ஓஹா வரை நீட்டிக்கப்பட்டது.
இதற்கான துவக்க விழா நாளை ராமேஸ்வரத்தில் நடக்கிறது. மாலை 4.45 மணிக்கு மத்திய ரயில்வே இணை அமைச்சர் வேலு கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.
தமிழக குடிசை மாற்றுத்துறை அமைச்சர் சுப.தங்கவேலன் தலைமை தாங்குகிறார். முதல் நாள் என்பதால் இந்த ரயில் மண்டபம் வரை மட்டுமே செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 2 ஏசி பெட்டிகள், 4 சிலிப்பர் பெட்டி மற்றும் 4 சாதாரண பெட்டிகள் இருக்கும். இது மண்டபம், ராமநாதபுரம், மானாமதுரை, மதுரை, திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, திருப்பதி, கடப்பா, குர்ணூல், மகபூப்நகர், நிசாமாபாத், அவுரங்காபாத், மன்மத், ஜால்கன், சூரத், வதோதரா, அகமதாபாத், ராஜ்கோட், ஜாம்நகர் மற்றும் துவாரகாவில் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ராமேஸ்வரத்தில் இருந்து கிளம்பி திங்கட்கிழமை மாலை 3.15 மணிக்கு குஜராத் மாநிலம் ஓஹா நகரை சென்றடையும்.
அதேபோல் வாரந்தோறும் செவ்வாய் கிழமை காலை 5.55 மணிக்கு ஓஹாவில் புறப்பட்டு வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு ராமேஸ்வரம் வந்து சேரும். இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று முதல் துவங்குகிறது.