423 மணி நேரத்தை வீணடித்த எம்பிக்கள்
கடந்த 2004ம் ஆண்டு மே 17ம் தேதி 14வது லோக்சபாவின் முதல் கூட்டம் கூடியது. நேற்று கடைசி நாள் கூட்டம் முடிவடைந்தது.
மொத்தம் 15 கூட்டத் தொடர்கள் இதில் இடம் பெற்றன. 332 முறை லோக்சபா கூடியது. மொத்தம் 258 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இது இதுவரை இல்லாத அதிக பட்ச அளவாகும்.
1,738 மணி நேரமும், 45 நிமிடங்களும் அலுவல்கள் நடந்தன. ஆனால் எம்.பிக்கள் செய்த அமளி, துமளி, போராட்டம் உள்ளிட்ட இடையூறுகளால் 423 மணி நேரம் இதில் வீணடிக்கப்பட்டது.
கடைசி நாளான நேற்றும் கூட பெரும்பாலான உறுப்பினர்கள் சபைக்கு வரவில்லை. பல இருக்கைகள் காற்று வாங்கிக் கொண்டிருந்தன. பல அமைச்சர்களையும் நேற்று லோக்சபாவில் பார்க்க முடியவில்லை.
நேற்றைய கடைசி நாள் கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி உள்ளிட்ட சில முக்கியத் தலைவர்கள் பேசினர்.
'வாய் பார்த்த' 15 எம்.பிக்கள்!
14வது லோக்சபாவில் 15 எம்.பிக்கள் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை. வெறுமனே வந்து போய் சாதனை படைத்துள்ளனர் இவர்கள். முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவும் இவ்வாறு மற்றவர்கள் பேசுவதை வாய் மட்டும் பார்த்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் ஆவார்.
நடிகர் தர்மேந்திரா வாய் பார்த்த எம்.பிக்களில் ஒருவர். படங்களில் பக்கம் பக்கமாக வசனம் பேசிய இவர் கன்னிப் பேச்சு எனப்படும் முதல் பேச்சைக் கூட இந்த அவையில் பதிவு செய்யவில்லை. அதாவது தர்மேந்திரா ஒரு முறை கூட அவையில் பேசியதே இல்லை. இவர் ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் தொகுதி எம்.பி ஆவார்.
கன்னட நடிகர் அம்பரீஷும், வாய் பார்த்த எம்.பிக்களில் ஒருவர். கர்நாடக மாநிலம் மான்டியா தொகுதியின் காங்கிரஸ் எம்.பியான இவரும் லோக்சபாவில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரு வார்த்தை கூட பேசியதில்லை.
சட்டவிரோத விசா மோசடியில் சிக்கி பாஜகவிலிருந்து வெளியேற்றப்பட்ட குஜராத் எம்.பி. பாபுபாய் கீமா பாய் கதாரா, பீரன் சிங் எங்க்டி, மாணிக்ராவ் ஹோடில்யா காவிட், பலிராம் காஷ்யப், சோஹன் போடாய், சோமாபாய் காந்தாலால் கோலி படேல், சிவசேனா எம்.பி. ஆனந்த் பிரகாஷ் பரஞ்ச்பே, பேனி பிரசாத் வர்மா, சலீம் இக்பால் ஷெர்வானி, பகுஜன் சமாஜ் கட்சியின் பீஷ்ம சங்கர், அக்ப்ர அகமது டம்பி, கன்வார் சர்வார் சிங், லட்சுமண் ராவ் பாண்டுரங்க பாட்டீல், முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் என இந்தப் பட்யில் நீளுகிறது.
கேள்வி கேட்காத சோனியா - அத்வானி
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக தலைவர் அத்வானி ஆகியோர் சபையில் பேசியுள்ளனர். ஆனால் ஒரு கேள்வி கூட இவர்கள் கேட்டதில்லை.
அதேபோல ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா, எம்.பியாக இருந்தபோது ஒரு கேள்வி கூட கேட்டதில்லை.
காங்கிரஸ் எம்.பி. ஜிதீன் பிரசாதா 6 கேள்விகள் கேட்டுள்ளார். ராகுல் காந்தி 5 கேள்விகள் கேட்டுள்ளார்.
நடிகர் ராஜ் பாபர் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஐந்து கேள்விகள் கேட்டுள்ளார். வினோத் கண்ணா நான்கு கேள்விகள் கேட்டுள்ளார்.
காங்கிஸ் கட்சியின் சச்சின் பைலட் ஒரே ஒரு கேள்வி கேட்டுள்ளார்.
நான் ரொம்ப பிசி - அகிலேஷ்
கடந்த ஐந்து ஆண்டுகளாக ஏன் சபையில் பேசவே இல்லை என்ற கேள்விக்கு அகிலேஷ் யாதவ் கூறுகையில், அடுத்த முறை கண்டிப்பாக பேசுவேன். இந்த முறை கட்சிப் பணிகளில் பிசியாக இருந்து விட்டேன். எனவேதான் பேச முடியவில்லை. அடுத்த முறை பாருங்கள், லோக்சபாவை கலக்கப் போகிறேன் என்கிறார்.