தரிசனம்-கோவில்களில் 'கோல்ட் கார்ட்' திட்டம்
மதுரை: பக்தர்களின் வசதிக்காக தமிழ கோவில்களில் 'கோல்ட் கார்ட்' திட்டத்தை இந்துசமய அறநிலையத்துறை அறிமுகம் செய்துள்ளது.
தமிழகத்தில் இந்து சமய அற நிலையத்துறை கட்டுப்பாட்டில் சுமார் 20,000க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இந்த கோவில்களில் தரிசனம் பெற தமிழகம், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாட்டில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
இவர்கள் திருவிழா மற்றும் முக்கிய நாட்களில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்ய மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இவர்களின் குறையை போக்கும் வகையில் பக்தர்களின் வசதிக்காக 'கோல்ட் கார்ட்' திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அறிமுகம் செய்துள்ளது.
இத் திட்டத்தின்படி கோயில் திருப்பணிக்கு ஆணையரின் பொது நல நிதிக்கு ரூ.5 லட்சம் செலுத்தினால் அந்த பக்தர் பெயரில் 'கோல்ட் கார்ட்' வழங்கப்படும்.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள எந்த ஒரு கோவிலுக்கு செல்லும்போதும் இந்த கோல்ட் கார்ட்டை காட்டினால் அந்த பக்தரின் குடும்பத்தினர் 5 பேருக்கு சிறப்பு தரிசனம் செய்ய சுவாமி சன்னதிக்கு நேரடியாக அனுமதிக்கப்படுவர்.
இந்த திட்டத்திற்கு பொது மக்கள் தரப்பில் இருந்து ஆதரவு கிடைக்கும் என்று இந்து சமய அறநிலையத்துறை நம்புகின்றது.