For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக கூட்டணியில் பாமக: காங்கிரஸ் தீவிர முயற்சி

By Sridhar L
Google Oneindia Tamil News

Ramadoss
சென்னை: பாமகவை திமுக கூட்டணியில் நீடிக்கச் செய்யும் நடவடிக்கைகளில் காங்கிரஸ் தீவிரமாக இறங்கியுள்ளது.

திமுக கூட்டணியிலிருந்து விலகிவிட்ட பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், காங்கிரஸ் கூட்டணியில் நீடிப்பதாகக் கூறி வந்தார். ஆனால், இலங்கை விவகாரத்தில் இவரது கோரிக்கைக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி செவி சாய்க்கவில்லை.

டெல்லியில் சோனியாவை ராமதாஸ் சந்தித்தபோது கூட்டணியில் தொடர வேண்டுமானால் திமுகவுடன் மோதல் போக்கை கைவிட வேண்டும் என்று நிபந்தனை போட்டார். இதனால் எரிச்சலைந்தார் ராமதாஸ்.

சோனியாவை சந்தித்துவிட்டு இலங்கை விஷயமாக வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை ராமதாஸ் சந்தித்தபோது இருவரும் காரசாரமாக பேசும் நிலை உருவானது.

நான் இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது என்று முகத்தில் அடித்தது போல ராமதாசுக்கு பதில் தந்தார் முகர்ஜி. இதனால் கடுப்பான ராமதாஸ் இச் சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் கடுகடுத்த முகத்துடன் பேசிய ராமதாஸ், முகர்ஜி பேசியதை அப்படி நிருபர்களிடம் கூறிவிட்டுச் சென்றார்.

இதையடுத்து ராமதாஸை தன் பக்கம் இழுக்கும் முயற்சிகளில் அதிமுக தீவிரமானது. ராமதாசும் அதிமுக கூட்டணிக்கு பச்சைக் கொடி காட்டும் நிலைக்குச் சென்றார்.

திமுக-காங்கிரஸ் கூட்டணி, அதிமுக கூட்டணி சம பலத்தில் இருக்கும் நிலையில் அதிமுக பக்கம் பாமக சென்றால் நமது தலையில் நாமே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வது போலாகும் என காங்கிரஸ் தலைமைக்கு இங்குள்ள மூத்த தலைவர்கள் தகவல் தந்து வருகின்றனர்.

மேலும் மக்களவைத் தேர்தலில் பாமகவின் உதவி முன்னெப்போதையும் விட திமுகவுக்கு இப்போது அவசியம் என்ற நிலை உள்ளது.

கூட்டணியை விட்டு பாமக விலகினால் பாமகவைவிட காங்கிரஸ், திமுகவுக்கே அதிக இழப்பு ஏற்படும் என்ற நிலையில் திமுகவும் காங்கிரசும் ராமதாஸை சமாதானப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளன.

ஒரு பக்கம் அமைச்சர் ஆற்காடு வீராசாமி மூலம் ராமதாஸைத் தாக்கி அறிக்கை விட்டாலும் அவரது உறவை துண்டிக்க திமுக தயாராக இல்லை.

இந் நிலையில் தான் ராமதாஸை தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் ஆகியோர் இரு தினங்களுக்கு முன் சந்தித்து கூட்டணியில் நீடிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

அதே போல நேற்று காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பாமக தலைவர் ஜி.கே.மணியை சந்தித்துப் பேசினார். சோனியாவின் ஆலோசனையின் பேரிலேயே இந்தச் சந்திப்புகள் நடந்ததாகத் தெரிகிறது.

மேலும் ராமதாஸின் கோரிக்கைப்படி இலங்கை விவகாரத்தில் சில நடவடிக்கைகள் எடுக்கவும் மத்திய அரசு முன் வந்துள்ளது.

போர் நிறுத்தத்தை வலியுறுத்தி சோனியாவிடம் தந்த கடிதத்தின் நகலை நேற்று முதல்வர் கருணாநிதியை சந்தித்தபோது கொடுத்தார் ராமதாஸ். இது குறித்து சோனியாவிடம் பேசுவதாக உறுதியளித்த கருணாநிதி, அதன்படியே பேசியதாகவும் தெரிகிறது.

இந் நிலையில் தான் திடீரென வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கர மேனன் கொழும்பு செல்வார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழக காங்கிரசிலும் டெல்லியிலும் எப்போதுமே அதிமுகவை ஆதரிக்கும் ஒரு கோஷ்டி உண்டு. இந்த கோஷ்டி மூலம் காங்கிரஸ் கூட்டணிக்கு ஜெயலலிதா அச்சாணி போடும் நிலையில், அதை சமாளிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது திமுக.

சோனியாவுடனான கருணாநிதியின் நல்லுறவால் மட்டுமே இந்தக் கூட்டணி நீடித்து வரும் நிலையில், அதிமுக ஆதரவு காங்கிரஸ் கோஷ்டியின் முயற்சிகளை முறியடிக்கும் நடவடிக்கைகளில் திமுக தீவிரமாக இறங்கியுள்ளது.

அதன் ஒரு பகுதியாகவே தனது கூட்டணியின் பலத்தை அதிகரிக்க ராமதாஸை எப்படியாவது தக்க வைக்க முயன்று வருகிறது.

இதையே காங்கிரசும் விரும்புவதால் ராமதாசுக்கு இப்போது ஏக டிமாண்ட்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X