பி.எஸ்.என்.எல்.லின் இந்தியா கோல்டன் 50 திட்டம் இன்று முதல் அமல்
இது குறித்து பி.எஸ்.என்.எல்.தமிழ்நாடு சர்க்கிள் தலைமைப் பொதுமேலாளர் அலுவலகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.சார்பில், நாடு முழுவதும் ஒரு நிமிடத்துக்கு 50 காசில் பேசும் இந்தியா கோல்டன் 50 திட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.
இந்த திட்டத்தில் புதிய சிம்கார்டு, சாதாரண பிரீபெய்டு திட்டங்களுக்கான விலையில் கிடைக்கும். இந்த 50 காசு திட்டத்தில் சேருவதற்கு முதல் மாதம் 375 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். இதில் 30 ரூபாய்க்குப் பேசலாம். இது 30 நாட்களில் காலாவதியாகிவிடும். அதன்பிறகு மாதா மாதம் 375 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
நிமிடத்துக்கு 50 காசு மட்டுமே!
இந்த திட்டத்துக்கான பல்ஸ் ரேட் 60 வினாடிகள். இந்த திட்டத்தில் இந்தியா முழுவதும் எந்த லேண்ட்லைன் போனுக்கும் உள்ளூர் மற்றும் எஸ்.டி.டி.கட்டணம் நிமிடத்துக்கு 50 காசுகள்.
இந்த திட்டத்தில் குறிப்பிட்ட பி.எஸ்.என்.எல். எண்களுக்கான கட்டணச் சலுகைகள் கிடையாது.
ஐ.எஸ்.டி.
அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து மற்றும் இலங்கைக்கு நிமிடத்துக்கு 7 ரூபாய் 20 காசுகளும், நேபாளம், வங்காளதேசம், பூடான், மாலத்தீவு மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு நிமிடத்துக்கு 9 ரூபாயும் ஐஎஸ்டி கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனைத் தவிர ஐரோப்பிய நாடுகள், சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா, ஹாங்காங், குவைத், பக்ரைன் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்கு ஒரு நிமிடத்துக்கு 9 ரூபாய் 60 காசுகளும் இதர பகுதிகளுக்கு பேசுவதற்கு நிமிடத்துக்கு 12 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படும்.
உள்ளூர் மற்றும் தேசிய அளவில் எஸ்.எம்.எஸ். அனுப்புவதற்கு 50 காசு வசூலிக்கப்படும்.
மேலும் தரைவழித் தொலைபேசியைப் பொறுத்தமட்டிலும் எஸ்.டி.டி.கட்டணம் பாதியாகக் குறைக்கப்பட்டு உள்ளது. இதுவரை 60 வினாடிகளுக்கு ஒரு அழைப்பாக கணக்கிடப்பட்டது. இனி அது 120 வினாடிகளாக நீட்டிக்கப்படுகிறது. இதனால் எஸ்.டி.டி.கட்டணம் வெகுவாக குறைகிறது.
இந்த கட்டணக்குறைப்பு பி.எஸ்.என்.எல். தொலை பேசிகளில் இருந்து செய்யப்படும் அனைத்து அழைப்புகளுக்கும் (தனியார் தரைவழி தொலைபேசிகளுக்கும்) பொருந்தும்.
மேலும் 95 வசதி கொண்ட நாட்டில் உள்ள எல்லாத் தொலைபேசி சந்தாதாரர்களுக்கும் 0 டயலிங் கொண்ட எஸ்டிடி கொடுக்கப்படுகிறது. 95 வசதி நாளையில் இருந்து நீக்கப்படுகிறது.
இதற்காக கூடுதல் டெபாஸிட் தொகை செலுத்த வேண்டியது இல்லை.
இன்று முதல் பேசுங்க, பேசுங்க, பேசிக்கிட்டே இருங்க ..