ஸ்டாலின், ரஹ்மான், மயில்சாமி அண்ணாதுரைக்கு அண்ணா பல்கலையின் டாக்டர் பட்டம்
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகம், உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், சந்திராயன் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கவுள்ளது.
அண்ணா பிறந்தநாள் நூற்றாண்டுவிழாவை ஒட்டி அவரது பெயரில் இயங்கி வரும் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சமுதாயத்தின் வளர்ச்சிக்கும், நாட்டுக்கும் பெருமையும் தேடித்தந்தவர்களை கவுரவிக்க முடிவு செய்தது.
இதையடுத்து, உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், விஞ்ஞானி அண்ணாதுரை ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்யப்பட்டது.
தமிழகத்தின் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுக்கு ஆற்றிய பணிகளுக்காகவும் சென்னையில் மேம்பாலங்கள் அமைத்து போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுத்ததற்காகவும் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும்,
நிலவில் இந்தியாவின் காலடியை பதிக்கச்செய்து உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை தலை நிமிரச் செய்ததற்காக சந்திராயன்-1 திட்ட இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரைக்கும்,
2 ஆஸ்கர் விருதுகளை வென்று உலக அளவில் இந்தியாவுக்கு பெருமைத் தேடித்தந்ததற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.
இவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்குவதற்கு பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்ட நிலையில், பல்கலைக்கழக வேந்தரும், கவர்னருமான சுர்ஜீத் சிங் பர்னாலாவும் ஒப்புதல் அளித்துவிட்டார்.
மார்ச் இறுதியில் நடைபெறும் சிறப்பு பட்டமளிப்பு விழாவில் மூன்று பேருக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.