தொகுதிப் பங்கீடு: அதிமுக-மதிமுக பேச்சு துவக்கம்
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு குறித்து அதிமுக-மதிமுக இடையே பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
நாராளுமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடத்த அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், தம்பித்துரை ஆகியோர் அடங்கிய குழுவை அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அமைத்துள்ளார்.
இந்தக் குழு கூட்டணிக் கட்சியான மதிமுகவுடன் பேச்சுவார்த்தையை துவக்கியுள்ளது. நேற்றிரவு நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில், மதிமுக சார்பில் அதன் தொழிலாளர் அணிச் செயலாளர் திருப்பூர் துரைசாமி, தேர்தல் பணிக்குழுச் செயலாளர் டி.கே.சுப்பிரமணியம், சிவகங்கை மாவட்டச் செயலாளர் புலவர் செவந்தியப்பன், திருச்சி மாவட்டச் செயலாளர் மலர் மன்னன், சட்டத்துறைச் செயலாளர் தேவதாஸ், பாலவாக்கம் சோமு ஆகியோர் கலந்து கொண்டனர்.
(வைகோ கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளது நினைவுகூறத்தக்கது)
அப்போது தங்களுக்கு 8 தொகுதிகள மதிமுக கோரியதாகத் தெரிகிறது. மேலும் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்தும் மதிமுக ஒரு பட்டியலை அதிமுகவிடம் வழங்கியது.
இந் நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுடனும் அதிமுக குழு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
கூட்டணிக் கட்சிகளுடன் இந்தக் குழு மேலும் சில சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தும் என்று தெரிகிறது. இதையடுத்து ஜெயலலிதாவுடன் இந்தக் கட்சிகளின் தலைவர்கள் பேச்சு நடத்துவர். அப்போது தொகுதிப் பங்கீடு உறுதி செய்யப்படும்.