வைகோவுக்கு ஜாமீன்-இன்று விடுதலை
திருநெல்வேலி: தூத்துக்குடியில், மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு கருப்புக் கொடி காட்டிக் கைதான மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு நெல்லை கோர்ட் இன்று ஜாமீன் அளித்தது.
தூத்துக்குடிக்கு வந்த வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு வைகோ தலைமையில் நூற்றுக்கணக்கான மதிமுகவினர் மற்றும் பல்வேறு தமிழர் அமைப்பினர் சேர்ந்து கருப்புக் கொடியையும், துடைப்பங்களையும் காட்டி போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து வைகோ உள்ளிட்ட 195 பேர் கைது செய்யப்பட்டனர். அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். வைகோ உள்ளிட்டோர் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில் இன்று நெல்லை வக்கீல்கள் சங்கம் சார்பில் மாஜிஸ்திரேட் ஹேமந்த் குமார் முன்பு வைகோவுக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த ஜாமீன் கோரிக்கைக்கு போலீஸ் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்படவில்லை. இதையடுத்து நீதிபதி ஹேமந்த் குமார் வைகோவை சொந்த ஜாமீனில் விடுதலை செய்யலாம் என உத்தரவிட்டார்.
இதேபோல மதிமுக எம்.எல்.ஏக்களான விருதுநகர் வரதராஜன், சிவகாசி ஞானதாஸ் உள்ளிட்ட மற்றவர்களுக்கும் நீதிபதி ஹேமந்த் குமார் ஜாமீன் அளித்து உத்தரவிட்டார்.