நாடாளுமன்றத் தேர்தல் மானப் பிரச்சனை-மாயாவதி
லக்னெள: வரும் நாடாளுமன்ற தேர்தலில் உத்தரப் பிரதேசத்தி்ல் 80 தொகுதிகளிலும் நான் போட்டியிடுவதாக நினைத்து தொண்டர்கள் உழைக்க வேண்டும். இது கட்சியின் தன்மான பிரச்சனை என்று உபி முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி கூறியுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியக் கூட்டம் லக்னெளவில் நடந்தது. இதில் அக்கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பெரும் திரளாகக் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாயாவதி பேசுகையில்,
நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் நமது கட்சிக்கு தன்மானப் பிரச்சனை. உபியில் ஆளும் கட்சியாக உள்ள நாம், நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும்.
அப்போதுதான் மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நமது நோக்கம் நிறைவேறும். நமது பயணம் டெல்லியை நோக்கி இருக்க வேண்டும்.
பகுஜன் சமாஜ் மத்தியில் ஆட்சி அமைத்தால், சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் பயன்படும் வகையில் புதிய பொருளாதாரக் கொள்கை வடிவமைக்கப்படும்.
தனியார் துறையிலும் இடஒதுக்கீடு முறை கொண்டுவரப்படும். முற்பட்ட வகுப்பில் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ளவர்களுக்கு என்று தனியாக இடஒதுக்கீடு வழங்கப்படும்.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களிடையே பகுஜன் சமாஜ் கட்சிக்கு உள்ள செல்வாக்கை குறைத்து வாக்குகளை சிதறடிக்கும் வகையில் சில கட்சிகள் ஜாதி ரீதியாக வேட்பாளர்களை நிறுத்தத் திட்டமிட்டுள்ளன. அவர்களிடம் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றார் மாயாவதி.
கட்சியினர் தங்களுக்குள் உள்ள வேறுபாடுகள், அதிருப்தியை மறந்து கட்சியின் தன்மானத்தை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். நமது அரசு ஆற்றியுள்ள நற்பணிகளை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.
மொத்தமுள்ள 80 தொகுதிகளிலும் நான் போட்டியிடுவது போல் நினைத்து தொண்டர்கள் வெற்றிக்கு உழைக்க வேண்டும் என்றார் மாயாவதி.