மியூனிச் படுகொலை சம்பவத்தை நினைவூட்டும் லாகூர் தீவிரவாத தாக்குதல்
விளையாட்டு உலகையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்திய ஆண்டு 1972. அந்த ஆண்டு, மியூனிச்சில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளச் சென்ற இஸ்ரேல் அணி மீது பயங்கர தாக்குதல் நடந்தது.
பிளாக் செப்டம்பர் என்ற பெயருடைய தீவிரவாத அமைப்பு (பாலஸ்தீன அமைப்புடன் தொடர்புடையது இது) இஸ்ரேல் வீரர்களை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்து பின்னர் சுட்டுக் கொன்றது.
உலக அளவில் விளையாட்டு அணி மீது நடத்தப்பட்ட மிகப் பெரிய தாக்குதல் இதுதான்.
அந்த சம்பவத்தில் மொத்தம் 11 இஸ்ரேல் தடகள வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள், ஒரு ஜெர்மன் போலீஸ் அதிகாரி ஆகியோர் கொல்லப்பட்டனர்.
போலீஸார் நடத்திய மீட்பு நடவடிக்கையின்போது தீவிரவாதிகளில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். 3 பேர் உயிருடன் பிடிபட்டனர். இருப்பினும் பின்னர் ஜெர்மனி நாட்டின் லூப்தன்சா விமானத்தை தீவிரவாதிகள் கடத்திச் சென்று இந்த மூன்று பேரையும் விடுவிக்க நிபந்தனை விதித்ததால் 3 பேரும் விடுவிக்கப்பட்டு விட்டனர்.
இந்த கடத்தல் மற்றும் படுகொலைக்கு ஜெர்மனிதான் காரணமா என்றும் இதனால் பின்னர் சந்தேகம் எழுப்பப்பட்டு சர்ச்சைகளும் வெடித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்திற்குப் பின்னர் விளையாட்டு உலகை உலுக்கியுள்ளது லாகூர் சம்பவம்.