பெங்களூர்- தமிழக இன்போசிஸ் கால்சென்டர் ஊழியர் கொலை
பெங்களூர்: பெங்களூர் கால் சென்டரில் வேலை பார்த்த ஈரோட்டைச் சேர்ந்த வாலிபர் கொள்ளை கும்பலால் வீடு புகுந்து அடித்து கொலை செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் உமேஷ் கிருஷ்ணன் (27). பெங்களூரில் உள்ள இன்போசிஸ் நிறுவன கால் சென்டரில் வேலை பார்த்து வந்தார்.
சமீபத்தில் திருமணமான இவர் தனது மனைவி ஹனி மேரியுடன் (26) பானஸ்வாடி ராமசாமிபாளையத்தில் வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 4.00 மணிக்கு கொள்ளை கும்பல் அவர் வீட்டு கதவை தட்டியுள்ளது. கதவை திறந்த உமேஷ் கிருஷ்ணன் யார் என கேட்பதற்குள் அவரை அடித்து தாக்கி வீட்டுக்குள் தள்ளி கதவைப் பூட்டியுள்ளனர்.
அவரையும் அவரது மனைவி மேரியையும் கட்டையால் அடித்து, உதைத்து கட்டிப் போட்டுள்ளனர். இருவரின் வாய் மற்றும் மூக்கை செல்லோ டேப மூலம் ஒட்டினர்.
பின்னர் வீட்டிலிருந்த பொருட்களை கொள்ளை அடித்துள்ளனர். மேரியின் தங்கத்தாலி உட்பட 3 மோதிரம், ஒரு தங்க சங்கிலி மற்றும் ரூ 3,500 ஆகியவற்றை எடுத்து கொண்டு தலைமறைவாயினர்.
அவர்கள் போன பின் நீண்டநேர போராட்டத்துக்கு பின் மேரி தனது கயிறுகளை அவிழ்த்துள்ளார். தனது கணவனின் கட்டுகளையும் அவிழ்த்துவிட்டுள்ளார். ஆனால், உமேஷ் கிருஷ்ணனிடம் எந்த அசைவும் இல்லை. அவர் பேச்சு மூச்சு இல்லாமல் இருப்பதை அறிந்த மேரி அருகிலிருந்தவர்களின் உதவியுடன் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
ஆனால், வழியிலே உமேஷ் கிருஷ்ணனின் உயிர் பிரிந்தது. செல்லோடேப்பால் மூக்கு, வாய் ஆகியவை ஒட்டப்பட்டதால் அவர் மூச்சுத்திணறி இறந்துள்ளார்.
சமீபத்தில் உமேஷ் கிருஷ்ணன் வீட்டுக்கு பீரோ, கட்டில் போன்றவற்றை வாங்கியுள்ளார். அதை வீட்டுக்கு வைக்க வந்த வேலையாட்கள் கொள்ளை கும்பலுக்கு துப்பு கொடுத்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.