ஒரு ஓட்டுக் கூட வாங்காத வேட்பாளர்!
திருப்பூர்: திருப்பூர் அருகே நடந்த உள்ளாட்சி வார்டு தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் ஒரு ஓட்டுக் கூட வாங்காமல் 'சாதனை' படைத்துள்ளார்.
தேர்தலில் வெற்றி,தோல்வி என்பது வழக்கம், மேலும் குறைந்த வாக்குகள் பெற்று டெபாசிட் இழப்பவர்கள் கூட உண்டு. சிலருக்கு தங்களது குடும்பத்தினர் கூட ஓட்டு போடாமல் போய்விடும் நிலையில் தனது ஒரு ஓட்டை மட்டும் பெற்றவர்கள் கூட இருக்கிறார்கள்.
ஆனால், இவர்கள் அனைவரும் பின்னுக்கு தள்ளிவிட்டார் திருப்பூர் மாவட்டம், உடுமலை ஒன்றியம் செல்லப்பம்பாளையம் ஊராட்சியை சேர்ந்த முத்துக்குமார் என்பவர்.
செல்லம்பாளையம் முதல் வார்டுக்கு நடந்த உள்ளாட்சி தேர்தலில் முத்துக்குமார் உள்ளிட்ட 5 பேர் போட்டியிட்டனர்.
தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து, ஓட்டு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் சுயேச்சை வேட்பாளர் அருணாசலம் என்பவர் 199 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார்.
முத்துக்குமாருக்கு ஒரு ஓட்டுக் கூட விழவில்லை. அவர் செல்லம்பாளையத்தின் மூன்றாவது வார்டை சேர்ந்தவர் என்பதால் அவராலும் அவருக்கு ஓட்டுப்போட முடியவில்லை.