பாகிஸ்தான்- ஓயும் சர்வதேச 'விளையாட்டுகள்'!
சென்னை: லாகூரில் நடந்துள்ள தீவரவாத சம்பவத்தால் கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுக்களின் சர்வதேச அமைப்புகள், பாகிஸ்தானில் விளையாட்டுப் போட்டிகளை நடத்த தடை விதிக்கக் கூடும் என்ற சூழ்நிலை எழுந்துள்ளது.
ஏற்கனவே ஆஸ்திரேலிய அணியும், இங்கிலாந்து அணியும் பாகிஸ்தானுக்கு வந்து கிரிக்கெட் விளையாட மறுத்து வந்தன. தீவிரவாத அபாயம் அதிகமாக இருப்பதாக இவை கூறி வந்தன.
தற்போது இலங்கை அணி வீரர்கள் மீது நடத்தப்பட்ட பெரும் தாக்குதல் இவர்களின் வாதத்தை நிரூபிப்பது போல அமைந்து விட்டது.
எனவே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளின் கிரிக்கெட் அணிகள் இனி பாகிஸ்தானுக்கு வருமா என்பது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.
லாகூர் சம்பவத்தால், பாகிஸ்தானில் சர்வதேச அளவிலான போட்டிகள் இனி நடைபெறுவதும் கேள்விக்குறியாகியுள்ளது. லாகூர் சம்பவத்தைக் காரணம் காட்டி கிரிக்கெட், ஹாக்கி உள்ளிட்ட போட்டிகளுக்கான சர்வதேச அமைப்புகள் பாகிஸ்தானை தவிர்க்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே சாம்பியன்ஸ் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடத்தப்படாமல் ரத்து செய்யப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.
இந்திய விளையாட்டு அணிகளும் தற்போதைக்கு பாகிஸ்தான் பற்றி நினைத்துக் கூட பார்க்க மாட்டாது என கருதப்படுகிறது.
எனவே லாகூர் சம்பவத்தால் பாகிஸ்தான் விளையாட்டுத் துறை பெரும் பாதிப்பை சந்திக்கும் என கருதப்படுகிறது.