இந்தியாவுக்குப் பதில் சென்ற இலங்கை அணி
லாகூர்: பாகிஸ்தானுக்கு விளையாடச் செல்ல இந்தியா மறுத்த நிலையில் இந்தியாவுக்குப் பதிலாக விளையாடச் சென்றது இலங்கை அணி. இந் நிலையில் தான் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
பாகிஸ்தானில் உள்ள பாதுகாப்பு நிலையைக் கருத்தில் கொணடு கடந்த சில வருடங்களாகவே கிரிக்கெட் விளையாட ஆஸ்திரேலிய அணி மறுத்து வந்தது. இந்திய அணியும், மும்பைத் தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தான் செல்ல மறுத்து விட்டது.
இதையடுத்து இந்தியாவுக்குப் பதில் விளையாட வருமாறு இலங்கைக்கு அழைப்பு விடுத்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.
இதைப் பரிசீலனை செய்த இலங்கை கிரிக்கெட் வாரியம், டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் விளையாட சம்மதம் தெரிவித்தது.
முதலில் ஒரு நாள் போட்டிகள் நடைபெற்றன. இந்த நிலையில் தற்போது டெஸ்ட் போட்டிகள் நடந்து வந்தன.
முதல் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில் இரு அணிகளும் 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வந்தன. இந்த நிலையில்தான் இப்படி ஒரு தீவிரவாதத் தாக்குதல் நடந்துள்ளது.
கடைசியாக பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலிய ஏ அணி தான் கடந்த 2007ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வந்தது. அதற்கு முன்னதாக இங்கிலாந்து அணி கடந்த 2005ல் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அதன் பின்னர் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய அணிகள் எதுவும் பாகிஸ்தானுக்கு வரவில்லை.
முன்பு ஸ்ரீகாந்த்தை தாக்கிய ரசிகர்கள்:
பாகிஸ்தானில் வெளிநாட்டு கிரிக்கெட் அணியினர் மீது தாக்குதல் நடந்துள்ளது இது முதல் முறையல்ல. முன்பு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஸ்ரீகாந்த் இருந்தபோது கராச்சியில் முட்டைகளை வீசி கடுமையாக தாக்கினர் ரசிகர்கள்.
ஆனால், இப்போது தான் முதன்முறையாக தீவிரவாதத் தாக்குதல் நடந்துள்ளது.
1989ல் இந்திய கிரிக்கெட் அணி ஸ்ரீகாந்த் தலைமையில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்த அணியில்தான் முதன் முதலாக சச்சின் டெண்டுல்கர் இடம் பெற்றிருந்தார்.
கராச்சி டெஸ்ட் போட்டியின்போது, இந்திய வீரர்கள் மீது பாகிஸ்தான் ரசிகர்கள் வெறித் தாக்குதலை மேற்கொண்டனர். பீல்டிங்கில் இருந்த ஸ்ரீகாந்த் மீது முட்டைகளை வீசித் தாக்கினர். சிலர் உள்ளே புகுந்து ஸ்ரீகாந்த்தை சரமாரியாக அடித்து அவரது டி-சர்ட்டை கிழித்தனர்.
போலீஸார் விரைந்து வந்து ரகளை செய்த வீரர்களை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தை பெரிதுபடுத்த விரும்பாமல் இந்தியா தொடர்ந்து விளையாடியது.