மும்பை பாணியில் சரமாரியாக தாக்கிய தீவிரவாதிகள்!
லாகூர்: இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தீவிரவாதிகள் இன்று நடத்திய கொலை வெறித் தாக்குதல் கிட்டத்தட்ட மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதலைப் போலவே இருந்தது.
மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளைப் போலவே லாகூர் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளும் டிரஸ் அணிந்திருந்தனர். முதுகில் பைகளைத் தொங்க விட்டபடி கையில் துப்பாக்கிகளுடன் சரமாரியாக சுட்டுத் தள்ளியுள்ளனர்.
மேலும், வேறு பகுதியிலிருந்து வந்து உடனடியாக தாக்குதலில் இறங்கியது போலவும் தோன்றுகிறது. மேலும் மும்பையில் தாக்குதல் நடத்திய அதே கும்பலைச் சேர்ந்தவர்கள் தான் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்க வேண்டும் என்றும் போலீசார் கூறுகின்றனர்.
தீவிரவாதிகள் வந்த விதமும், அவர்கள் தாக்குதல் நடத்திய விதமும், போலீஸாரை செயலிழக்க வைத்த விதமும் இதை நிரூபிப்பதாக உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ரிக்ஷாவில் வந்த தீவிரவாதிகள்..
தீவிரவாதிகளில் மூன்று பேர் ரிக்ஷாவில் வந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
காயமடைந்த வீரர்கள் குறித்து இலங்கை அணியின் மேலாளர் பிரன்டன் குருப்பு கூறுகையில், குமார சங்கக்காரா, அஜந்தா மென்டிஸ் காயமடைந்துள்ளனர் என்றார்.
கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொகுகே கூறுகையில், சங்கக்காரா, மெண்டிஸ் தவிர தரங்கா பிரனவிதனா, திலன் சமரவீரா ஆகியோரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
சமரவீரா நெஞ்சில் குண்டு பாய்ந்தது:
சமரவீராவின் நெஞ்சில் குண்டு பாய்ந்துள்ளதாக கூறப்படுகிறது என்றார்.