அடுத்த தலைமை தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா - ஜனாதிபதி அறிவிப்பு
தலைமைத் தேர்தல் ஆணையராக உள்ள கோபாலசாமியின் பதவிக்காலம் ஏப்ரல் 20ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து அவருக்கு அடுத்த தலைமைத் தேர்தல் ஆணையராக நவீன் சாவ்லா பதவியேற்கவுள்ளார்.
2010ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி வரை தலைமைத் தேர்தல் ஆணையராக பொறுப்பு வகிப்பார் சாவ்லா.
இதுகுறித்த நியமனத்திற்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் ஒப்புதல் அளித்துள்ளார். இத்தகவலை குடியரசுத் தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது.
லோக்சபா தேர்தல் ஐந்து கட்டமாக நடைபெறுகிறது. இதில் முதல் கட்டத் தேர்தல் கோபாலசாமியின் தலைமையின் கீழ் நடைபெறும். மீதமுள்ள நான்கு கட்ட வாக்குப்பதிவுகளும் நவீன் சாவ்லா கீழ் நடைபெறவுள்ளன.
2005ம் ஆண்டு மே 13ம் தேதி தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார் சாவ்லா.
சமீபத்தில் நவீன் சாவ்லாவை நீக்க வேண்டும் என்று கோரி குடியரசுத் தலைவருக்கு கோபாலசாமி பரி்ந்துரை அனுப்பினார். ஆனால் அதை மத்திய அரசின் பரிந்துரையை ஏற்று நிராகரித்தார் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல். இதன் மூலம் நவீன் சாவ்லா தலைமைத் தேர்தல் ஆணையராக பதவியேற்க ஏற்பட்ட தடை நீங்கியது.