தேர்தல் பணிக்கு 1.25 லட்சம் ஆசிரியர்கள், பாதுகாப்புக்கு 1 லட்சம் போலீஸார்
சென்னை: தமிழக தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஒரு லட்சம் போலீஸார் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இவர்கள் தவிர பதட்டமான வாக்குச் சாவடிகள் மற்றும் தொகுதிகளில் துணை ராணுவப் படையினரும் பயன்படுத்தப்படவுள்ளனர்.
அதே போல 1.25 லட்சம் ஆசிரியர்கள் உள்பட சுமார் 2 லட்சம் அரசு ஊழியர்களும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
தமிழகத்தில் மே 13ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. புதுச்சேரியிலும் அன்றைய தினமே வாக்குபபதிவு நடைபெறுகிறது.
தேர்தலையொட்டி ஏற்பாடுகள் தொடங்கி விட்டன. தமிழகம் முழுவதும் தேர்தல் நாளன்று மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு குறித்த ஆலோசனைகள் மும்முரமாகியுள்ளன.
மொத்தமாக 1 லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். போலீஸாரோடு இணைந்து ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் போலீஸார் ஆகியோரும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
பதட்டமான தொகுதிகள் மற்றும் வாக்குச் சாவடிகளில் துணை ராணுவப் படையினர் நிறுத்தப்படுவர்.
தேர்தல் பணியில் 1.25 லட்சம் ஆசிரியர்கள்:
தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் கடந்த 2004ம் ஆண்டு தேர்தலின்போது 46,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த தேர்தலில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாக்குச் சாவடிகள் வழக்கம்போல அரசு மற்றும் தனியார் பள்ளிகள், அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், பஞ்சாயத்து கட்டிடங்கள், நகராட்சி கட்டிடங்கள் ஆகியவற்றில் தான் அமைக்கப்பட உள்ளன.
ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் தலா 4 பேர் வீதம் கடந்த தேர்தலில் 1.84 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.
வாக்குச் சாவடிகளைத் தவிர மற்ற தேர்தல் பணிகளிலும் ஏராளமான அரசு ஊழியர்கள், அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டனர்.
அதே போல இம்முறையும் 1.25 லட்சம் ஆசிரியர்கள் உள்பட சுமார் 2 லட்சம் அரசு ஊழியர்களும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள், உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் என அனைத்து பள்ளி ஆசிரியர்களிலும் 50 சதவீதம் பேர் தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள் என்று பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதே போல 3000க்கும் மேற்பட்ட கல்லூரி ஆசிரியர்களும் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளனர்.