அரசு வேலை ஆசைகாட்டி ரூ 16 லட்சம் பறித்த போலி பெண் சாமியார்
கரூர்: கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ 16 லட்சம் மோசடி செய்த போலி பெண் சாமியாரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ளது வீரமலைப்பட்டி. இந்த கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுளா (50) . இவர் குறி சொல்லி வருகிறார்.
இவரிடம் குழந்தை வரம், கடன் பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகள் குறித்து குறி கேட்ட பலர் வருவதுண்டு. இந்த நிலையில் அவ்வாறு வரும் அப்பாவி பக்தர்களிடம் இவர் பல வித மோசடி செய்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.
விரகவுண்டன் பட்டியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் தனது மகனுக்கு அரசு வேலை வேண்டி குறி கேட்க சென்றுள்ளார்.
அப்போது போலி பெண் சாமியர் மஞ்சுளா தனது அண்ணன் விஜய் தலைமை செயலகத்தில் அதிகாரியாக பணி புரிவதாகவும் அவர் மூலம் வேலை வாங்கித் தருவாதக கூறி ரூ ஒன்னறை லட்சம் வாங்கியுள்ளார்.
இதே போன்று தாந்தோணிமலைச் சேர்ந்த குழந்தைவேல், விரமலைப்பட்டி ஜோதி என்பவரிடம் ரூ 40 ஆயிரம், நளினி என்பவரிடம் ரூ 2 லட்ச்தது 40 ஆயிரம் என ஏழு பேரிடம் மொத்தம் ரூ 16 லட்சம் வசூல் செய்துள்ளார்.
ஆனால் பல நாட்கள் ஆகியும் வேலை வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை. இதனால் பாலகிருஷ்ணன் கரூர் எஸ்பியிடம் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் உடனடி நடவடிக்கை எடுக்க கரூர் எஸ்பி உத்தரவிட்டார். இதனையடுத்து போலி பெண் சாமியார் மஞ்சுளாவிடம் குற்றப்பிரிவு போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.