உத்தப்புரம்-ஏப். 15ல் விசாரணை அறிக்கை தாக்கல்
மதுரை: உத்தப்புரத்தில் தலித் சமுதாயத்தினர் மீது காவல்துறை தாக்கியது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை ஏப். 15ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் உத்தப்புரம் கிராமத்தில், தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் பொன்னுத்தாய் என்பவர் மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு நீதிபதிகள் பால்வசந்த குமார், சி.கே.மிஸ்ரா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள், விசாரணைக்குழு தமது விசாரணையை துரிதப்படுத்த வேண்டும். நீதிபதிகளின் விசாரணை செலவுத் தொகையை மாவட்ட ஆட்சியர் வழங்க வேண்டும்.
விசாரணையை விரைந்து நடத்தி ஏப்ரல் 15 -ம் தேதி அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.