கன்னியாகுமரியில் சிவகாமி ஐஏஎஸ் போட்டி
சமீபத்தில் தனது ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்த சிவகாமிக்கு அக் கட்சியின் முதன்மைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் வரும் தேர்தலில் நாடு முழுவதுமே அக் கட்சி தனித்துப் போட்டிடுகிறது. தமிழகத்தில் சில குறிப்பிட்ட தொகுதிகளை பகுஜன் சமாஜ் கட்சி குறி வைத்துள்ளது.
கன்னியாகுமரி தொகுதியில் சிவகாமி போட்டியிடுவார் என்று அக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவர் காஞ்சீபுரம் அல்லது திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட சிவகாமி விருப்பம் தெரிவித்ததை கட்சி மேலிடம் ஏற்றுக் கொண்டுள்ளது.
சிவகாமியின் கணவரின் சொந்த ஊரான கற்காடு கிராமம் இந்தத் தொகுதியில் தான் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த தேர்தலில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி திருச்செந்தூர் நாடாளுமன்றத் தொகுதியுடன் இருந்தது. இப்போது தொகுதி மறுவரையின்படி நாகர்கோவில் நாடாளுமன்றத் தொகுதியுடன் இணைக்கப்பட்டு கன்னியாகுமரி தொகுதி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் மட்டும் சுமார் 40,000தலித் வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இந்த தொகுதிக்குள் அடங்கிய நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளிலும் தலித் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.
இதையடுத்தே இந்தத் தொகுதியை தேர்வு செய்துள்ளார் சிவகாமி. கன்னியாகுமரி தொகுதியில் அவர் போட்டியிடுவதை உறுதிப்படுத்தும் வகையில் தொகுதி முழுவதும் அவரது பெயரில் சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன.